;
Athirady Tamil News

வாக்னர் கலகம்: அமெரிக்காவிற்கும், நேட்டோவிற்கும் எந்த பங்கும் இல்லை- பைடன் திட்டவட்டம்!!

0

ரஷியாவில் அந்நாட்டு தனியார் ராணுவமாகவும் கூலிப்படையாகவும் வாக்னர் அமைப்பு எனும் படை செயல்பட்டு வந்தது. சென்ற வார இறுதியில், அதன் தலைவர் எவ்ஜெனி பிரிகோசின் தலைமையில், அவரது படை ரஷிய அரசாங்கத்திற்கும், ராணுவத்திற்கும் எதிராக ஒரு கலகத்தை தொடங்கியது. இக்கலகம் பெரும் ராணுவ கிளர்ச்சியாக மாறலாம் என உலகம் எதிர்பார்த்திருந்த நிலையில் எந்த ரத்தக்களறியும், வன்முறையும் இல்லாமல் அது அடங்கி விட்டது.

இக்கலகத்தின் பின்னணியில் மேற்கத்திய நாடுகளின் தூண்டுதலும், ஆதரவும் இருந்ததாக புதின் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில் அமெரிக்கா இதனை மறுத்துள்ளது. இதுகுறித்து பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவிற்கோ அல்லது நேட்டோ அமைப்பிற்கோ, ரஷியாவின் வாக்னர் கூலிப்படை அமைப்பின் கடந்த வார குறுகிய கால கிளர்ச்சியுடன் எந்த சம்பந்தமும் இல்லை. அங்கு நடந்த எழுச்சி, ரஷிய அரசாங்கத்திற்கெதிராகவும், அதிபருக்கு எதிராகவும் நீண்ட காலமாக நிலவி வரும் உள்நாட்டு அமைப்புமுறை சார்ந்த பிரச்சினை. அங்கு நிலவி வரும் சூழலை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். ஆனால் இது எவ்வாறு முடிவடையும் என்பதை தற்போதே அறுதியிட்டு கூற முடியாது.

இவ்வாறு அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். ரஷியாவிற்கான முன்னாள் அமெரிக்க தூதர் மைக்கேல் ஃபவுல், “ரஷிய எதேச்சதிகார அமைப்பிற்கெதிரான சவால்களும், ஜனநாயக எழுச்சிகளும் தோன்றும் போதெல்லாம், உடனே அதன் பின்னணியில் அமெரிக்கா உள்ளதாக பழி கூறி அத்தகைய எழுச்சிகளுக்கு மக்களின் ஆதரவு கிடைக்காமல் பார்த்துக் கொள்வது ரஷிய அதிபரின் வழக்கம்.

மேலும், ரஷியாவின் சீர்குலைவின் பின்னணியில் தாங்கள் இருப்பதாக தவறாக சித்தரிக்கப்படுவதை அமெரிக்காவும், நேட்டோவும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாது” என கூறியுள்ளார். ரஷியாவின் உக்ரைன் ஆக்ரமிப்பால், இரு நாடுகளுக்குமிடையே நடந்து வரும் போர் முடிவுக்கு வராமல் தொடரும் நிலையில், இந்த கிளர்ச்சியும், இதை புதின் கையாண்ட விதமும், மேற்கத்திய நாடுகளின் அடுத்த நகர்வையும் உலகம் கூர்ந்து கவனித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.