;
Athirady Tamil News

இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயற்சி !!

0

2017 ஆம் ஆண்டுக்கு பின்னர் நூற்றுக்கும் அதிகமான மருந்து வகைகள் பயன்பாட்டுக்கு தடை செய்யப்பட்டுள்ளன என்றும் உயிர்காக்கும் 14 வகையான மருந்துகள் எதிர்வரும் டிசெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்கு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல, இல்லாத பிரச்சினைகளை தோற்றுவிக்க முயல்கின்றனர் என்று தெரிவித்தார்.

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்தபோது வெடித்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அவர் பதவி விலகியவுடன் வெடிக்கவில்லை என்றும் ஆகவே சுகாதார சேவை குறித்து வெளியாகும் பொய்யான செய்திகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) முன்வைத்த ”மருந்து மரணங்கள்”தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்த சுகாதாரத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேலும் கூறுகையில்,

“மருந்து தட்டுப்பாடு மற்றும் தரமற்ற மருந்து இறக்குமதி என்று பல்வேறு மாறுப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்விடயம் தொடர்பில் சுகாதாரத்துறை அமைச்சு விசாரணை முன்னெடுத்துள்ளது. அறிக்கை கிடைத்ததும் அதை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன்.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த யுவதியின் மரணத்தை தொடர்ந்து தரமற்ற மருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிதி மோசடி செய்யப்பட்டுள்ளது என்ற நிலைப்பாட்டை தோற்றுவிக்க ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். இந்த யுவதிக்கு பயன்படுத்திய மருந்து 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி காலப்பகுதியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு 20 ஆண்டுகாலமாக பயன்பாட்டில் உள்ளது.

பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தின் ஊடாக இந்த மருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் குறுகிய நோக்கங்களுக்காக இலவச சுகாதார சேவையை பலவீனப்படுத்தும் வகையில் போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

பேராதனை வைத்தியசாலையில் உயிரிழந்த அந்த யுவதிக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி அன்றைய தினம் 10 இற்கும் அதிகமானோருக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகளில் 1 இலட்சத்து 45 ஆயிரத்துக்கும் அதிகமாக ஐ.வி என்ற இந்த தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது .அவற்றில் 79 ஆயிரத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசியால் பேராதனை வைத்தியசாலையில் யுவதி உயிரிழந்ததாக பிரசாரப்படுத்தப்படுகின்றது. இது முறையற்றது.

கோட்டபாய ராஜபக்ஷ ஜனாதிபதியாகவிருந்தபோது வெடித்த சமையல் எரிவாயு சிலிண்டர்கள் அவர் பதவி விலகியவுடன் வெடிக்கவில்லை. ஆகவே சுகாதார சேவை குறித்து வெளியாகும் பொய்யான செய்திகள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தியுள்ளோம்.

தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் ஒருசில முறையற்ற செயற்பாடுகளை தடுத்ததால் இன்று எனக்கு எதிரான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. மருந்து விவகாரம் தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துங்கள் பல விடயங்களை வெளிப்படுத்துகிறேன். மருந்து விஷமானதால் பலர் உயிரிழக்கிறார்கள் என செய்திகள் வெளியாகுகின்றன. பொய்யான செய்திகள் இலவச சுகாதார சேவைக்கு பாரிய அச்சுறுத்தலாக உள்ளது.

குளியாப்பிடிய பகுதியில் 4 மாத குழந்தை உயிரிழப்பு தொடர்பில் பரஸ்பர கருத்துக்கள் குறிப்பிடுகிறது. அந்த குழந்தைக்கு செலுத்திய தடுப்பூசி அன்றைய தினமே 19 குழந்தைகளுக்கும் செலுத்தப்பட்டுள்ளது. துரதிஸ்டவசமாக குழந்தை உயிரிழந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அறிக்கை கோரியுள்ளேன். மருந்து விவகாரம் தொடர்பில் தற்போது தோற்றம் பெற்றுள்ள நிலைமை தொடர்பில் ஆராய 7 பேர் அடங்கிய குழு நியமித்துள்ளேன். வெகுவிரைவில் உண்மை வெளிப்படுத்தப்படும்.

வைத்தியசாலைக்கு செல்லும் அனைத்து நோயாளர்களின் உயிர்களுக்கும் உத்தரவாதம் வழங்க முடியாது. அதனால் தான் அங்கு பிரேத அறை உருவாக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலைகளுக்கு அருகில் மலர்ச்சாலைகளும் உள்ளன. இதுவே யதார்த்தம் ” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.