;
Athirady Tamil News

உக்ரைன் துறைமுகத்திலிருந்து வெளியேறியுள்ள முதல் சரக்குக் கப்பல்!

0

உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா விலகிய பின்னர், அந்த நாட்டின் மிரட்டலையும் மீறி உக்ரைன் துறைமுகத்தில் இருந்து முதல் சரக்கு கப்பல் வெளியேறியுள்ளது.

உக்ரைனின் தெற்கு துறைமுகமான ஒடெசாவில் இருந்து சரக்கு கப்பல் புறப்பட்டு சென்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கருங்கடல் வழியை பயன்படுத்தும் எந்த கப்பலும் தங்கள் கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகும் என்றே எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதுவே அப்பகுதியில் புதிய சிக்கலை ஏற்படுத்தும் சூழலையும் உருவாக்கியது.

இந்த நிலையில் ஹொங்ஹொங் நாட்டைச் சேர்ந்த Joseph Schulte என்ற சரக்கு கப்பல் கடந்த புதன்கிழமை(16) பகல் புறப்பட்டு சென்றதாக உக்ரைன் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 16ஆம் திகதிக்கு பின்னர் ஒடெசா துறைமுகத்தில் இருந்து வெளியேறும் முதல் சரக்குக் கப்பல் இதுவென கூறுகின்றனர். குறித்த கப்பலானது 2022 பெப்ரவரி மாதத்தில் இருந்தே வெளியேற முடியாமல் ஒடெசா துறைமுகத்தில் சிக்கிக்கொண்டுள்ளது.

ரஷ்யாவால் அந்த கப்பலுக்கு ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அதற்கான இழப்பீட்டை வழங்க உக்ரைன் தயாராக இருப்பதாக வாக்குறுதி அளித்த நிலையிலேயே, அந்த கப்பல் புறப்பட்டுள்ளது. இந்த நிலையில், அந்த கப்பலானது துருக்கியை சென்றடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுடனான தானிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பின்னர், தானிய கிடங்குகள் மற்றும் தொடர்புடைய கட்டமைப்புகள் மீது தொடர் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது.

இதனிடையே, ருமேனிய எல்லைக்கு அருகிலுள்ள நதி துறைமுகத்தில் உள்ள தானிய கிடங்குகளை ரஷ்ய ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக ஒடெசா பிராந்தியத்தின் ஆளுநர் தெரிவித்தார். இந்த விவகாரம் ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ருமேனியாவை கொந்தளிக்க வைத்துள்ளது.

தானிய ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பின்னர், உக்ரைன் தானிய ஏற்றுமதியானது ருமேனியா ஊடாகவே முன்னெடுக்கப்பட்டு வருகிறது. தற்போது Joseph Schulte என்ற சரக்கு கப்பல் சுமார் 30,000 தொன் சரக்குடன் புறப்பட்டு சென்றுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு பின்னர் உக்ரைன் துறைமுகங்களில் சிக்கிக்கொண்ட 60 சரக்கு கப்பல்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.