;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தல்: பா.ஜனதா கட்சி வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிக்க திட்டம்!!

0

பாராளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. ஆளும் பா.ஜனதா கட்சி, ஆட்சியை தக்கவைக்கவும், பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், கூட்டணி அமைத்து பா.ஜ.க.வை வீழ்த்தி ஆட்சி அமைக்கவும் திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்த முறை 3-வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் பா.ஜ.க. தீவிரமாக உள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 303 இடங்களை பா.ஜ.க. பிடித்தது.

வருகிற தேர்தலில் இன்னும் கூடுதலான இடங்களை பிடிக்க இப்போதே அதிரடி வியூகங்களை அமைத்து பா.ஜ.க. களத்தில் இறங்கி உள்ளது. பலவீனமாக கருதப்படும் 160 தொகுதிகளை பா.ஜ.க. அடையாளம் கண்டு அதில் வெற்றி பெற தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்த 160 தொகுதிகள் இந்தியாவின் தென் மாநிலங்களிலும், கிழக்கு பகுதி மாநிலங்களில் சிலவற்றிலும் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு முன் கூட்டியே வேட்பாளர்களை அறிவிக்கவும் பா.ஜ.க. முடிவு செய்துள்ளது. இதன் மூலம் எதிர்க்கட்சிகளின் வியூகங்களை முறியடிக்க முடியும் என்று பா.ஜ.க. தலைமை நம்புகிறது. இதன் மூலம் வேட்பாளர்கள் தங்கள் தொகுதியில் கூடுதல் கவனம் செலுத்த முடியும். மேலும் தங்கள் பிரசாரத்தை வலுப்படுத்தி மக்களை கவர முடியும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த 160 தொகுதிகளில் பெரும்பாலானவை கடந்த தேர்தலில் பா.ஜ.க. தோல்வியை தழுவிய தொகுதிகள் ஆகும். பா.ஜ.க. வெற்றி பெற்ற ரோஹ்தக், பாக்பத் போன்ற இடங்களும் இந்தத் தொகுதிகளில் அடங்கும். இந்த 160 இடங்களில் கட்சியை பூத் வாரியாக பலப்படுத்தவும், வாக்காளர் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டு செயல்பட்டு வருவதாக தெரிகிறது. கடந்த தேர்தலிலும் முன்னதாக பா.ஜ.க. இதேபோன்ற பலவீனமான தொகுதிகளின் பட்டியலை உருவாக்கி வியூகம் அமைத்து அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றது. அதே பார்முலாவை இப்போதும் கடைபிடிக்க இருக்கிறது. குறிப்பிட்ட இந்த 160 தொகுதிகளில் முக்கிய தலைவர்கள் போட்டியிடும் 40 தொகுதிகளை கண்டறிந்து அதில் வெற்றிபெறுவது குறித்து கட்சி நிர்வாகிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.

மத்திய மந்திரிகள், பா.ஜ.க. மூத்த தலைவர்கள் கொண்ட குழு இதற்கான பணிகளில் ஈடுபட்டு உள்ளது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி போட்டியிட இருக்கும் ரேபரேலி தொகுதி, சமாஜ்வாடி கட்சித் தலைவரும், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்-மந்திரியுமான அகிலேஷ் யாதவின் மனைவி போட்டியிடும் தொகுதி உள்ளிட்ட சில பகுதிகளை குறி வைத்து அங்கு பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, கட்சியின் மூத்த தலைவர் அமித்ஷா ஆகியோர் பேரணி நடத்தி உரையாற்றினர். வேட்பாளர்களை முன்கூட்டியே அறிவிப்பது குறித்த இறுதி முடிவு இந்த ஆண்டின் இறுதியில் 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களின் முடிவில் எடுக்கப்படலாம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.