;
Athirady Tamil News

பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை!!

0

பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயற்பாடுகளுக்கும் அரசாங்கம் இடமளிக்காது என்றும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் நாட்டில் பாதாள உலக செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களம் தற்போது அரசியல் தலையீடற்ற நிறுவனமாக இயங்குகின்றது என்றும், நாட்டில் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு பொலிஸ் திணைக்களம் அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இதனைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டிரான் அலஸ்,

பொலிஸ் அதிகாரிகளின் நியமனங்களின்போது, அரசியல் தலையீடுகள் இடம்பெறுவதைத் தடுத்துள்ளதுடன், கடந்த காலங்களில் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்த பொலிஸாரின் நலன்புரி சேவைகள் பலவற்றை தற்போது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது இணையவழி ஊடாக கடவுச் சீட்டுகளை வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்களுக்கு செயற்திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தில் செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை நவீனமயப்படுத்த அவசியமான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மைக் காலமாக அரச சார்பற்ற நிறுவனங்களைப் பற்றி அதிகம் பேசப்படுகிறது. இது தவிர இந்நாட்டில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், பதிவு செய்யப்படாத அரச சார்பற்ற நிறுவனங்கள் இலங்கையில் இனிமேலும் செயற்பட முடியாது என்று குறிப்பிட்ட அமைச்சர், இந்நாட்டில் இயங்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தற்போது பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதுடன், அவர்கள் தங்களுக்குள்ளேயே மோதிக்கொள்வதோடு, குறிப்பாக போதைப்பொருள் தொடர்பாக இடம்பெறும் மோதல்களே இவ்வாறு அவர்கள் குழுக்களாகப் பிரிந்து தாக்குதல்களில் ஈடுபடுவதற்குக் காரணமாக அமைகின்றதாகவும். பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட அமைச்சர், பொறுப்புள்ள அரசாங்கம் என்ற வகையில், பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு செயலையும் செய்ய எவரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் இதன்போது தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான முழுமையான விசாரணை அறிக்கையை கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு கத்தோலிக்க திருச்சபையும் ஒத்துழைப்பு வழங்க முடியும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.