;
Athirady Tamil News

பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்? ஆய்வு செய்ய சிறப்பு குழு அமைப்பு!!

0

நாட்டில் உள்ள முக்கிய துறைகள் ஒரே நிர்வாக அமைப்பின்படி செயல்படுத்தப்பட வேண்டும் என்பதில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு தீவிரமாக உள்ளது. இதற்காக ஏற்கனவே பல்வேறு துறைகளில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்னும் முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதாக கடந்த ஆண்டு முதல் அடிக்கடி பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. பெரும்பாலான மாநில கட்சிகள் மத்திய அரசின் இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியாவில் அரசியலமைப்பு சட்டப்படி பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு வரை பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே காலகட்டத்தில்தான் தேர்தல்கள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் சில மாநிலங்களில் ஆட்சி கலைப்பு மற்றும் பெரும்பான்மை இல்லாததால் ஆட்சி கவிழ்ப்பு போன்றவை காரணமாக சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.

இதனால் பாராளுமன்றத்துக்கு ஒரு தடவையும், மாநில சட்டசபைகளுக்கும் அந்தந்த மாநிலங்களின் சட்டசபை காலம் முடிவடைவதை பொருத்தும் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்தல்களை இந்திய தேர்தல் ஆணையம் நடத்தி வருகிறது. பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனி தேர்தல் நடத்தும் போது அதிக செலவு ஏற்படுவதாக கூறப்பட்டது. நிர்வாக ரீதியாகவும் பாதிப்பு ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நாடு முழுவதும் ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது. 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்து இருக்கின்றன.

இதேபோல மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்கும்போதும் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவாகி உள்ளது. பாராளுமன்றத்துக்கும், சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் இந்த செலவுகளை கணிசமாக குறைக்க முடியும் என்று கருதப்பட்டது. இதையடுத்து இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது பற்றி மத்திய அரசு கடந்த சில மாதங்களாக ஆலோசித்து வந்தது. இந்த நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய அரசு இந்த விவகாரத்தில் அதிரடியாக ஒரு நடவடிக்கையை மேற்கொண்டது. அதன்படி 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுடன் மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் சேர்த்து தேர்தல் நடத்துவது பற்றி ஆய்வு செய்ய குழு அமைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

இந்த குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைவராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தலைமையிலான குழுவினர் பாராளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி விரிவான ஆய்வு மேற்கொள்வார்கள். இந்த ஆய்வுகளில் தெரியவரும் கருத்துக்களை தொகுத்து மத்திய அரசிடம் அறிக்கையாக தாக்கல் செய்வார்கள். அதன் அடிப்படையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்காக ஒருங்கிணைந்து “இந்தியா” கூட்டணியை உருவாக்கி இருக்கும் எதிர்க்கட்சிகளுக்கு மத்திய அரசின் இந்த நடவடிக்கை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மும்பையில் இன்று 2-வது நாளாக கூடி முக்கிய முடிவுகளை அறிவிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களது சிந்தனையை திசை திருப்பும் வகையில் மத்திய அரசின் இன்றைய நடவடிக்கை அமைந்துள்ளது. இதற்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக கம்யூனிஸ்டு கட்சியினர் ஆவேசமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். இந்திய அரசியலமைப்பு மீது மத்திய அரசு தாக்குதல் நடத்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி உள்ளன.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் தேர்தல் நடத்துவதில் கடும் குளறுபடிகள் ஏற்படும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து உள்ளன. குறிப்பாக ஒரே நேரத்தில் பாராளுமன்றத்திற்கும், மாநில சட்டசபைகளுக்கும் தேர்தல் நடத்துவதாக இருந்தால், இந்திய அரசியலமைப்பு சட்டங்களில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்பது முக்கியமாகும். இதை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டி உள்ளன. ஆனால் வருகிற 18-ந்தேதி பாராளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்கும்போது இதற்கான தீர்மானம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், ஆம்ஆத்மி, இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.