;
Athirady Tamil News

மின்கட்டணம் செலுத்தாத 8 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிப்பு

0

நாட்டில் மின்கட்டணம் செலுத்த முடியாமல் கடந்த 03 காலாண்டுகளில் 08 இலட்சம் பேரின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நெருக்கடியை தணிக்கும் துறைசார் கண்காணிப்புக் குழுவில் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நடைபெற்ற குறித்த குழுவின் குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல்கள் கவனத்தில் கொள்ளப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த மின்வெட்டுகளில் பெரும்பாலானவை மிகவும் ஏழை மக்களின் இணைப்புகள் என்பது தெரியவந்துள்ளது.

கற்றல் நடவடிக்கை பாதிப்பு
மின் துண்டிப்பு காரணமாக குழந்தைகளின் ஊட்டச்சத்து முதல் மாணவர்களின் கற்றல் நடவடிக்கை உள்ளிட்ட பலவற்றை அவர்கள் இழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலைமை காரணமாக எதிர்காலத்தில் அவர்களுக்கு ஆபத்தான சமூக மட்டத்தை உருவாக்குவதற்கான அடிப்படையை வழங்கும் விடயமாக இது அமையலாம் என குழு சுட்டிக்காட்டியுள்ளது.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தைப் போக்குவதற்கும், நிலையான பொருளாதார வளர்ச்சிக்கான வசதிகளை வழங்குவதற்கும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை ஆகியவற்றின் பொறுப்பைக் கருத்தில் கொண்டு, சர்வதேச நாணய நிதியம் அவதானித்துள்ள நிர்ணய செலவுக்கு ஏற்ற விலையாக கட்டணத்தை மாற்ற வேண்டும் என்று குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தல்
இதன்படி, 05 முன்மொழிவுகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு துறைசார் கண்காணிப்புக் குழு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு பரிந்துரைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 03 மாத காலத்திற்கு மின் கட்டணத்தை பிரிக்கும் வகையில் மின் கட்டணத்தை குறைக்க மின்சார சபைக்கு உத்தரவிடுவதும் அதில் உள்ளடங்கியுள்ளது.

தீவிர வறுமையால் பாதிக்கப்பட்ட குடும்ப அலகுகளுக்கு சிறப்பு நியாய விலை முறையை அறிமுகப்படுத்துவது மற்றும் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்தும் வகையில் தொழில் முறையைப் பாதுகாக்கும் விலைக் கொள்கையை விரைவாக அறிமுகப்படுத்துவது இரண்டாவது மற்றும் மூன்றாவது முன்மொழிவுகள் ஆகும்.

இந்த ஆண்டின் எதிர்காலத்தில் விலை நிர்ணயம் பற்றிய முழு வெளிப்படைத்தன்மை மதிப்பாய்வைத் தொடங்குவது மற்றொரு பரிந்துரை ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.