ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: பொலிஸார் பணி இடைநீக்கம்
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/02/Screenshot-2024-02-08-171926-658x430.jpg)
கொழும்பில் உள்ள பொலிஸ் நிலையமொன்றில் கடமை நேரத்தில் அலட்சியமாக இருந்ததன் குற்றச்சாட்டில் மூன்று பொலிஸார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 13 ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோரே இவ்வாறு பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் கொழும்பு ஜிந்துப்பிட்டியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களுக்கு ஆட்டுப்பட்டித் தெரு பொலிஸ் நிலையத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபரொருவரினால் பால் பக்கெற்றுக்குள் நஞ்சு கலந்து கொடுக்கப்பட்டுள்ளது.
தற்காலிக பணிநீக்கம்
இதன் காரணமாக, குறித்த பால் பக்கெற்றுக்களை அருந்திய சந்தேக நபர்கள் இருவரும் தற்போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, பொலிஸாரின் அலட்சியம் காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், இச்சம்பவத்தின் போது கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.