;
Athirady Tamil News

ஐ.நா. தலைமையகத்திற்கு அடியில் ஹமாஸின் சுரங்கப்பாதை : வலுக்கும் இஸ்ரேலின் குற்றச்சாட்டு

0

காசாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பலஸ்தீன அகதிகளுக்கான தலைமையக அலுவலகத்திற்கு கீழே சுரங்கப்பாதைகள் இருப்பதை கண்டுபிடித்திருப்பதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

இந்த சுரங்கப்பாதைகள் ஹமாஸ் போராளிகளால் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதற்கான மின்சார விநியோகம் ஐ.நா. அமைப்பின் தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்டுள்ளது, எனவும் இது குறித்து இஸ்ரேல் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் அகதிகளுக்கான அமைப்பு, ஹமாஸ் அமைப்பினருக்கு மறைமுகமாக உதவி வருவதாக முன்னரே இஸ்ரேல் கூறிவந்திருந்த நிலையில், இந்த சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு இஸ்ரேலின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்ப்பதாக அமைகின்றது.

ஹமாஸ் போராளிகள்
இருந்தபோதிலும், சுரங்கப்பாதைகளில் ஹமாஸ் போராளிகள் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் எதுவும் இதுவரை முன்வைக்கப்படாமல் இருக்கின்றது.

இந்த சுரங்கபாதை அரை கிலோமீற்றர் தூர நீளத்துக்கு இருப்பதாகவும் இதில் ஆங்காங்கே 10 கதவுகள் காணப்பட்டதாகவும் இதனைப் பார்வையிட்ட இஸ்ரேல் இராணுவம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்துள்ளது.

கட்டுமான வசதிகளை அழிப்பது
காசாவின் குறுக்கே பல கிலோமீற்றர்களிற்கு சுரங்கப்பாதைகளை அமைத்ததாக ஹமாஸ் அமைப்பு ஒப்புக்கொண்டிருந்த வேளையில் தற்போது இந்த சுரங்கப்பாதை இஸ்ரேல் இராணுவத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023) ஒக்டோபர் 7ஆம் திகதி ஆரம்பமாகிய இஸ்ரேல்-ஹமாஸ் போரின் முக்கிய நோக்கங்களில், காசாவில் ஹமாஸ் அமைத்திருக்கும் அனைத்து கட்டுமான வசதிகளை அழிப்பதும் ஒன்று என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.