;
Athirady Tamil News

தில்லி கலால் கொள்கை வழக்கு: கைதுக்கு எதிரான கேஜரிவால் மனு மீது உத்தரவு நிறுத்திவைப்பு

0

தில்லி கலால் கொள்கை முறைகேடு விவகாரத்தில் தன்னை அமலாக்கத் துறை கைது செய்ததற்கு எதிராக முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தில்லி உயர்நீதிமன்றம் புதன்கிழமை நிறுத்திவைத்தது.

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கடந்த மார்ச் 21-ஆம் தேதி கைது செய்தது.

கேஜரிவாலை ஏப்ரல் 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. முன்னதாக, தேர்தல் நடைபெறும் சமயத்தில் அமலாக்கத் துறை தன்னை கைது செய்தது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக்கு முரணானது என்று கூறி, தில்லி உயர்நீதிமன்றத்தில் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா முன்னிலையில், புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ, கேஜரிவாலை ஜாமீனில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்தார்.

மேலும், இந்த வழக்கில் சட்டவிரோதமாக பண பரிவர்த்தனை நடைபெற்றதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறிய அவர், தற்போது இந்த வழக்கு ஆரம்ப நிலையில் இருப்பதாகவும் வாதிட்டார்.

அத்துடன், மனுதாரருக்கு (கேஜரிவால்) எதிராக பிறப்பிக்கப்பட்ட முதலாவது ரிமாண்ட் உத்தரவை எதிர்த்துதான் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும், அடுத்தடுத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளின் மீது இந்த மனு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜூ வாதத்தை முன்வைத்தார்.

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அரவிந்த் கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி, அவரை ஜாமீனில் விடுவிக்குமாறு வாதிட்டார். இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி ஸ்வர்ண கந்த ஷர்மா, இந்த விவகாரத்தில் உத்தரவை நிறுத்திவைப்பதாகக் கூறி, இவ்வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.