மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி – 2023

யாழ்ப்பாண மாவட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களை பொருளாதார ரீதியில் வலுப்படுத்தும் நோக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட சுவாபிமானி போட்டி – 2023 யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்(2024.05.17) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் ஏற்கனவே பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்புவதற்கான மாவட்ட மட்ட தெரிவு போட்டியாக இது அமைந்துள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் நீங்கள் உங்களது திறமைகளை முற்றுமுழுதாக வெளிப்படுத்தி நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் போட்டியாக இந்த போட்டி அமைந்துள்ளதாக தெரிவித்தார்.
நீங்கள் இவ்வாறான போட்டிகளில் ஈடுபடுவது பாராட்டுக்குரிய விடயமாகும். அத்தோடு தமது திறன்களை விருத்திசெய்வதோடு சமூக அபிவிருத்தியிலும் ஈடுபடுகின்ற அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பாராட்டுக்குரியவர்கள் என்றும் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் இதன்போது
மேலும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் உ.தர்சினி, மாவட்ட மற்றும் பிரதேச மட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சுவாபிமானி போட்டியில் தெரிவு செய்யப்பட்டு தமது திறமையை வெளிப்படுத்துவதற்காக வருகை தந்திருக்கும் போட்டியாளர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.