;
Athirady Tamil News

செர்பியா மக்களவையில் அமளி! புகைக்குண்டு வீச்சில் 3 உறுப்பினர்கள் காயம்!

0

செர்பியா நாட்டு மக்களவையில் எதிர் கட்சியினர் வீசிய கண்ணீர் மற்றும் புகைக்குண்டுகளினால் சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்துள்ளனர்.

செர்பியா நாட்டு மக்களவியில் அந்நாட்டு பல்கலைக்கழகக் கல்விக்கான நிதியை அதிகரிப்பது குறித்த வாக்கெடுப்பு நேற்று (மார்ச்.4) நடைபெறவிருந்த நிலையில், இந்த அவை சட்டவிரோதமானது என்றும் அந்நாட்டு பிரதமர் மிலோஸ் உசெவிகின் ராஜிநாமாவை முதலில் உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறி எதிர்கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது, எதிர் கட்சியைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள் சிலர் தங்களது இருக்கைகளை விட்டு இறங்கி மக்களவை சபாநாயகரை நோக்கி ஓடியப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்களுடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்நிலையில், மற்ற சில எதிர் கட்சி உறுப்பினர்கள் மக்களவையினுள் கருப்பு மற்றும் இளஞ்சிவப்பு நிற புகைக்குண்டுகளை வீசி, அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், சுமார் 3 மக்களவை உறுப்பினர்கள் காயமடைந்ததுடன், ஆளுங்கட்சி உறுப்பினரான ஜாஸ்மினா ஒப்ராடோவிக் என்பவருக்கு பக்கவாதம் (ஸ்ட்ரோக்) ஏற்பட்டு அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 4 மாதங்களுக்கு முன் அந்நாட்டு ரயில் நிலையம் ஒன்றின் கூரை சரிந்து 15 பேர் பலியானதைத் தொடர்ந்து, செர்பியா நாட்டு மக்கள் ஊழலுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தினால் கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டு பிரதமர் உசெவிக் தனது பதவியை ராஜிநாமா செய்தார். அவரது ராஜிநாமாவை செர்பியா மக்களவை உறுதி செய்யாமல் அடுத்த வேலைகளில் ஈடுபட்டதினால் கோவமடைந்த எதிர் கட்சியினர் தற்போது அமளியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.