நாடு கடத்தப்பட்ட 53,000 பேரின் கடவுச்சீட்டு முடக்கம்! எங்கே?

பல்வேறு குற்றச்செயல்களினால் தங்களது தாயகத்திற்கு நாடு கடத்தி அனுப்பப்பட்ட 53,000 குடிமக்களின் கடவுச்சீட்டை பாகிஸ்தான் அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வேலைக்காக சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் அந்நாட்டு மக்கள் பெரும்பாலும் அங்கு யாசகம் பெருவதில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.
இதனால், தங்களது நாடுகளுக்கு பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக பாகிஸ்தானை பல்வேறு நாடுகளின் அரசுகள் விமர்சித்து வந்தன.
இந்த விவகாரம் குறித்து சௌதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பாகிஸ்தான் அரசிடம் புகாரளித்து முறையான நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களில் யாசகம் தேடியது, போதைப் பொருள் கடத்தியது, சட்டவிரோத குடியேற்றம், பணியிலிருந்து தலைமறைவானது, ஒப்பந்தத்தை மீறியது உள்ளிட்ட குற்றங்களில் தொடர்புடைய ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களை சௌதி அரேபியா போன்ற நாடுகள் அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தின.
இந்த விவகாரத்திற்கு தீர்வுக்காணும் நடவடிக்கையாக தற்போது பாகிஸ்தான் அரசு வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதை தீவிரவாதச் செயலாகக் குறிப்பிட்டுள்ளது.
மேலும், குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக வெளி நாடுகளிலிருந்து தங்களது தாயகத்திற்கே நாடு கடத்தி அனுப்பப்பட்ட 53,000 பாகிஸ்தானியர்களின் கடவுச்சீட்டை முடக்கியுள்ளதாக பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, வெளி நாடுகளில் இதுபோன்ற செயல்களில் பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் ஈடுபடுவதினால் அந்நாட்டு கடவுச்சீட்டின் மீது பல்வேறு நாடுகள் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் தடைகளை விதித்துள்ளன.
இதனால், வெளி நாடுகளுக்குச் செல்ல விரும்பும் பாகிஸ்தானியர்களின் விசா பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.