வான்வெளியைப் பயன்படுத்தத் தடை: மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் பாகிஸ்தான்!

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியா எடுத்த நடவடிக்கைகளுக்கு எதிர்வினையாற்றுவதாகக் கருதி தங்களது வான்வெளியை இந்திய விமானங்கள் பயன்படுத்தத் தடை விதித்த பாகிஸ்தான் கோடிக்கணக்கில் நஷ்டத்தை எதிர்கொண்டுள்ளது.
எதிரிக்கு தண்டனை அளிப்பதாக நினைத்துக்கொண்டு, ஏற்கனவே சீரழிந்துகொண்டிருக்கும் பாகிஸ்தானின் பொருளாதாரத்தை அதளபாதாளத்துக்குக் கொண்டுசென்றுவிட்டது என்கின்றன தரவுகள்.
பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு தடை விதித்ததால், இந்திய விமானத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதுதான். ஆனால் அதனை சமாளிக்கும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது. ஆனால், தனது வான்வெளியைக் கடக்கும் விமானங்கள் மூலம் ஒரு நாளைக்கு பல லட்சம் வருமானம் ஈட்டி வந்த பாகிஸ்தான் இதுவரை பல கோடி இழப்பை சந்தித்துள்ளது.
ஒரே நாளில், பாகிஸ்தான் விமானத் துறைக்கு வந்து குவிந்த வருமானம் நின்றுபோயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த வகையில் பாகிஸ்தான் பெற்று வந்த வருவாய் என்பது பல கோடிகள். இது பற்றி சமூக வலைதளங்களில் பகிரப்படும் கருத்துகளில் வரலாற்றிலேயே இவ்வாறு கூட்டு நடவடிக்கையின் மூலம் செய்யப்பட்ட ஒரு முட்டாள்தனத்தைப் பார்த்ததில்லை என்று பலரும் குறிப்பிட்டு வருகிறார்கள்.
வெளிநாடுகளின் விமானங்கள் வந்தாலும், இந்தியாவிலிருந்து செல்லும் விமானங்கள்தான் பாகிஸ்தானை அதிகம் கடந்துசெல்லும் என்பதால், மிகப்பெரிய இழப்பாக இது இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
வெறுமனே வான்வெளியைப் பயன்படுத்துவது மட்டுமல்ல, பாகிஸ்தான் விமான நிலையத்தைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களைக் கூட்டினால் நாள் ஒன்றுக்கு பாகிஸ்தான் சந்திப்பும் இழப்பு கிட்டத்தட்ட 3 லட்சம் டாலர்கள் என்கிறது தரவு.