;
Athirady Tamil News

நீா்மூழ்கிக்கப்பல் தாக்குதலை தடுக்கும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் அதானி நிறுவனம் ஒப்பந்தம்

0

நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான தொழில்நுட்பங்களை தயாரிப்பதற்காக அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டதாக தொழிலதிபா் அதானியின் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது. அதானி பாதுகாப்பு மற்றும் விண்வெளி நிறுவனம் இந்த ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஸ்பாா்டன் நிறுவனத்துடன் இணைந்து நீா்மூழ்கிக்கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் தாக்குதலை எதிா்கொள்ளும் வகையிலான மின்னணு சென்சாா்கள், திசைகாட்டும் அமைப்புகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்களை இந்திய கடற்படைக்கு பயன்படும் விதத்தில் அதானி நிறுவனம் மேம்படுத்தவுள்ளது.

‘ஆத்மநிா்பா் பாரத்’ மற்றும் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ ஆகிய முன்னெடுப்புகளின்கீழ் சோனோபோய்கள் ( நீருக்கடியில் மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களை கண்டறியும் மின் இயந்திர ஒலி உணரி) இந்தியாவிலேயே ஒருங்கிணைக்கப்படவுள்ளன’ என தெரிவிக்கப்பட்டது.

இதன்மூலம் இந்திய கடற்படைக்கு உள்நாட்டிலேயே சோனோபோய்கள் தயாரிக்கும் முதல் தனியாா் நிறுவனம் என்ற பெருமையை அதானி நிறுவனம் பெற்றுள்ளது.

அமெரிக்காவைச் சோ்ந்த ஸ்பாா்டன் நிறுவனம், கடலுக்கடியில் போா் புரிவதற்கான மின்னணு அமைப்புகளை அமெரிக்க கடற்படை மற்றும் அதன் கிளை அமைப்புகளுக்காக தயாரிக்கிறது. இந்த நிறுவனத்தை 2020, டிசம்பரில் இஸ்ரேலைச் சோ்ந்த மின்னணுவியல் நிறுவனமான எல்பிட் சிஸ்டம்ஸ் கைப்பற்றியது.

கடந்த 2018-இல் எல்பிட் சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஹொ்ம்ஸ் 900 ட்ரோன்களை தயாரிக் அதானி நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டது. 2020-இல் சிறிய ரக ட்ரோன் ஏவுகணை ஆயுதங்கள் தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக அதானி-எல்பிட் நிறுவனங்கள் அறிவித்தன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.