கல்முனை விவகாரம் – முஸ்லிம் எம்பிக்களுடன் விசேட கலந்துரையாடல் : ஆதம்பாவா எம்பி புறக்கணிப்பு
கல்முனையின் சமகால விவகாரங்கள் தொடர்பாக தெளிவுபடுத்தும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை அனைத்துப்பள்ளிவாசல்கள் மற்றும் சிவில் நிறுவனங்களுக்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையே சனிக்கிழமை (02) ஒலுவில் கிறீன் வில்லாவில் இடம்பெற்றது.
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கலந்துரையாடலில் திகாமடுல்லயைச்சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.நிஷாம் காரியப்பர், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் வாஸீத் மற்றும் எம்.ஏ.தாஹிர் ஆகியோர் கட்சி பேதங்களுக்கப்பால் கலந்து கொண்டு கல்முனை எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் ஒன்றிணைந்து செயற்படுவதை உறுதி செய்தனர்.
இக்கலந்துரையாடலில் கல்முனையிலுள்ள அனைத்து பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்கள், ஜம்இய்யதுல் உலமா சபையினர், வர்த்தக சங்கப்பிரதிநிதிகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டு சமகால பிரச்சினைகள் குறித்து ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் முன்வைத்தனர்.
தேசிய மட்டத்தில் சமூகப்பிரச்சினைகள் பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லப்படவும் கல்முனை பிராந்தியத்தின் இருப்பு மற்றும் எதிர்கால நலன் குறித்த பரிசீலனைகள் முன் கொண்டு செல்வதற்கும் ஏதுவான ஆரோக்கியமான முயற்சியாக இக்கலந்துரையாடலில் அமைந்தது குறிப்பிடத்தக்கது.


















