;
Athirady Tamil News

உத்தரகாண்ட் வெள்ளம்: மாயமான 66 பேரை ரேடார் உதவியுடன் தேடும் பணி தீவிரம்

0

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டம் தராலியில் கடந்த வாரம் பெய்த அதிகனமழையால் கீர்கங்கா ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் வெள்ளத்தில் சிக்கி மாயமானார்கள். விடுதிகள், ஓட்டல்கள், வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. பல கட்டிடங்கள் சேற்றில் புதைந்துள்ளன. மீட்புப் பணியில் ராணுவம், தேசிய, மாநில பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் இந்தோ-திபெத் காவல்படையினர் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களில் இதுவரை 1,300 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த பேரழிவு சம்பவத்தில் இன்னும் 66 பேர் கண்டுபிடிக்கப்படவில்லை. அவர்களில் 24 பேர் நேபாளத்தை சேர்ந்த தொழிலாளர்கள். மீதமுள்ள 42 பேரில் 8 பேர் ராணுவ வீரர்கள், 13 பேர் பீகாரையும், 6 பேர் உத்தரபிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். அவர்களை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே சேறு மற்றும் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்க, தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிபுணர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நிலத்தில் ஊடுருவி பார்க்கும் நவீன ரேடார்கள் உதவியுடன் தேடும்பணியை தீவிரப்படுத்தியுள்ளனர் என்று தேசிய பேரிடர் மீட்புக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தநிலையில் இன்று (புதன்கிழமை) நாளை (வியாழக்கிழமை) நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 நாட்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.