;
Athirady Tamil News

சுனாமியை எதிர்கொள்ளும் சுற்றுச்சுவர்! ஜப்பான் கட்டியிருக்கிறது!!

0

இயற்கைப் பேரிடர்களில் ஒன்றான சுனாமியிலிருந்து தற்காத்துக் கொள்ளும் வகையில், ஜப்பான் மிகப்பெரிய மதில்சுவர் ஒன்றை கடற்கரையை ஒட்டிக் கட்டி வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மிக உறுதியாக, உயரமாக, 395 கிலோ மீட்டர் தொலைவுக்கு கடற்கரையிலிருந்து சற்றுத் தொலைவில் இந்த சுவர் கட்டப்பட்டு வருகிறது. சுவர் மட்டும் எழுப்பாமல், அதற்கு அப்பால் மிக அடர்ந்த வனப்பகுதியையும் உருவாக்கி வருகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதியை ஜப்பான் மக்கள் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஜப்பானில் ஏற்பட்ட மிக பயங்கர நிலநடுக்கம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியில், ஒரு சில வினாடிகளில் சுமார் 20 ஆயிரம் பேர் எங்குச் சென்றார்கள் என்றே தெரியாத அளவுக்கு நாசம் செய்திருந்தது. கட்டடங்களா, வாகனங்களா, ரயில் நிலையங்களா என எதையும் பார்க்கவில்லை அந்த ஆக்ரோஷ கடல் அலை. அனைத்தையும் வாரிச் சுருட்டிக்கொண்டு சென்றுவிட்டது.

இதன் காரணமாக மற்றொரு பேரிடருக்கும் வித்திட்டிருந்தது. அதுதான் ஃபுகுஷிமா டைய்சி அணுக்கதிர்வீச்சு அபாயம்.

இதனைத் தொடர்ந்துதான், கடலுடன் வாழ்வது எப்படி என்றப் பாடத்தைக் கற்கத் தொடங்கியது ஜப்பான். கடற்கரையை ஒட்டி மிகப்பெரிய சுவர் ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இந்த சுவர் என்றால், நம் வீட்டு சுற்றுச்சுவர் போல அல்லாமல், நான்கு மாடிக் கட்டடம் உயரத்துக்கு நின்றிருக்கிறது.

இது கடற்கரைகளை ஒட்டி சில நகரங்களை இரண்டாகப் பிளந்து கட்டப்பட்டு வருகிறது.

ஜப்பான், பசுபிக் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் பூமிப் பகுதி எப்போதும் அமைதியாக இருக்காது. பூமிக்கடியில் பூமித் தட்டுகளின் அசைவுகள் அதிகம் இருக்கும் இடம். இதனால், இந்த நாட்டில் மழை, வெய்யில் போலத்தான் நிலநடுக்கமும், சுனாமியும். எனவே, இந்த சுற்றுச்சுவர் அவர்களுக்கு மிகவும் அவசியமாகிறது.

ஆனால், இந்த சுற்றுச்சுவர் சுனாமியை தடுத்துவிடுமா என்றால், இல்லை என்றே ஜப்பான் நாட்டினர் கூறுகிறார்கள். பிறகு? இது சுனாமியின் வேகத்தைக் குறைக்கலாம். மக்கள் தப்பியோடவும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் ஒரு சில வினாடிகள் அதிகம் கிடைக்கலாம் என்ற அடிப்படையில் கட்டப்பட்டு வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.