மும்பையில் 23 மாடி கட்டடத்தில் பயங்கர தீவிபத்து: பெண் பலி
மும்பையில் 23 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்து பெண் பலியானார்.
மகாராஷ்டிர மாநிலம், மும்பையின் தஹிசரில் உள்ள 23 மாடி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். உடனே ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட 36 பேரை தீயணைப்பு மீட்புக் குழுவினர் காப்பாற்றினர். மீட்கப்பட்ட 36 பேரில் 19 பேர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் பெண் பலியான நிலையில் மாற்றுத்திறனாளி சிறுமியின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
மேலும் ஐந்து பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீயணைப்புத் துறையின் முதற்கட்ட விசாரணையில், அடித்தளத்தில் மின் கம்பி பழுதடைந்ததால் தீ விபத்து ஏற்பட்டு, பின்னர் மின் குழாய் வழியாக மேல்நோக்கி தீ பரவியது தெரியவந்தது.
இருப்பினும், மாலை 6.10 மணியளவில் தீ முழுமையாக அணைக்கப்பட்டது. கட்டடத்தின் ஏழாவது மாடியில் இந்த தீ விபத்து நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.