;
Athirady Tamil News

17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

0

மும்பை,

மராட்டியத்தின் மும்பை நகரில் பொவாய் பகுதியில் அமைந்த கட்டிடத்தில் உள்ள ஆர்.ஏ. ஸ்டூடியோவுக்கு நாடக ஒத்திகை நிகழ்ச்சிக்காக சிறுவர் சிறுமிகள் சிலர் சென்றுள்ளனர். அப்போது மர்ம நபர் ஒருவர், அவர்களில் 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்தி கொண்டு சென்றுள்ளார். இதனால், பயத்தில் அவர்கள் அலறியுள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பின்னர் அந்நபர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், தற்கொலை செய்வதற்கு பதிலாக, நான் ஒரு திட்டம் தீட்டினேன். அதன்படி, சில குழந்தைகளை பணய கைதிகளாக சிறை பிடித்து வைத்திருக்கிறேன் என்றார்.

சில எளிய, நல்ல மற்றும் நல்லொழுக்கம் சார்ந்த கோரிக்கைகளை நான் முன்வைத்திருக்கிறேன். ஏதேனும் சிறிய அளவிலான தவறான முடிவை நீங்கள் மேற்கொண்டாலும், அது என்னை வேறு வகையில் தூண்டி விட்டு விடும். இந்த இடத்தில் தீப்பற்ற வைத்து விடுவேன்.

எனக்கு பணம் தேவையில்லை. அதனை நான் கேட்கவும் இல்லை. நான் பயங்கரவாதியும் இல்லை என வீடியோவில் தெரிவித்து உள்ளார். அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நபரா? என்பது தெரியவில்லை. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் மதியம் 1.45 மணியளவில் நடந்துள்ளது. இதன்பின்பு, போலீசார் தரப்பில் 2 மணி நேரத்திற்கும் மேலாக அவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், குழந்தைகளை விடுவிக்க அவர் மறுத்து விட்டார். இதனால், போலீசார் அதிரடியாக கழிவறை வழியே உள்ளே நுழைந்தனர். பயந்து போய் இருந்த குழந்தைகளையும் பாதுகாப்பாக மீட்டனர்.

இந்நிலையில், அந்த நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளார். அவர் ரோகித் ஆர்யா என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர் இந்த கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதற்கான காரணம் எதுவும் தெரிய வரவில்லை. அதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர். மூத்த குடிமகன் மற்றும் மற்றொரு நபர் என மொத்தம் 19 பேர் பிடித்து வைக்கப்பட்டு இருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.