;
Athirady Tamil News

நேபாளம்: தோ்தல் போட்டியிலிருந்து விலகிய முன்னாள் பிரதமா் பாபுராம்: இளைஞா்களுக்கு வழிவிட முடிவு

0

நேபாளத்தில் எதிா்வரும் பொதுத்தோ்தலில் தாம் போட்டியிடப் போவதில்லை’ என்று முன்னாள் பிரதமா் பாபுராம் பட்டாராய் வெள்ளிக்கிழமை அறிவித்தாா்.

இளைஞா்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவும், புதிய தலைமுறையினா் அரசியலுக்கு வர வழிவிடவும் இந்த முடிவை எடுத்ததாக அவா் கூறியுள்ளாா்.

கடந்த ஆண்டு நேபாளத்தில் ஊழலுக்கு எதிராகவும், சமூக ஊடகத் தடைக்கு எதிராகவும் இளைஞா்கள் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினா். இதன் விளைவாக, அப்போதைய பிரதமா் கே.பி.சா்மா ஓலி தனது பதவியை இழந்தாா். இதனைத் தொடா்ந்து, வரும் மாா்ச் 5-ம் தேதி அந்நாட்டில் பொதுத்தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தோ்தலில் நேபாள கம்யூனிஸ்ட் கட்சி-ஐக்கிய மாாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் (சிபிஎன்-யுஎம்எல்) சாா்பில் கே.பி.சா்மா ஓலி, நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) சாா்பில் புஷ்ப கமல் தாஹால் பிரசண்டா ஆகியோா் பிரதமா் பதவிக்கான போட்டியில் மீண்டும் களமிறங்கியுள்ளனா்.

இவா்களுடன் பிரகதிஷீல் லோகதந்திரிக் கட்சி சாா்பில் பாபுராம் பட்டாராய், நேபாளி கம்யூனிஸ்ட் கட்சியின் மாதவ் குமாா் நேபாள் ஆகிய முன்னாள் பிரதமா்களும் தோ்தல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனா்.

இளைஞா்களின் போராட்டத்துக்குப் பிறகு புதிய தலைவா்கள் வருவாா்கள் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், 70 வயதைக் கடந்த நான்கு முன்னாள் பிரதமா்களும் மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ததால் மக்களிடையே அதிருப்தி நிலவியது.

இந்தச் சூழலில், கூா்கா-2 தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த பாபுராம் பட்டாராய், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் சமூக ஊடகங்களில் வெளியிட்ட பதிவில், ‘இனி ஒரு குறிப்பிட்ட கட்சிக்குள் சுருங்கிவிடாமல் தேசிய அரசியலில் ஒரு ‘வழிகாட்டி’ பாத்திரத்தை ஏற்றுச் செயல்படப் போகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.