பாதாள உலகத்தை நிலைகுலைய செய்த ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
இலங்கையில் சினிமா பாணியில் பாதாள உலகக் குழுவினருக்கு அதிர்ச்சி கொடுத்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் ஒலுகல தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 30 ஆம் திகதி இரவு ஏற்பட்ட சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திடீர் சுகவீனம் காரணமாக அவர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலதிக சிகிச்சை
அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர், பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில் சிறப்பு மருத்துவர்கள் குழுவால் பரிசோதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்போது தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ரோஹான் ஒலுகல தற்போது குணமடைந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
அநுர அரசாங்கத்தில் பாதாள உலகக் குழு மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பதுங்கியிருந்த பல பாதாள உலகக் குழுத் தலைவர்கள் ரோஹான் ஒலுகல தலைமையில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.