மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டி விபத்து- இருவர் காயம்( விபத்தின் CCTV காணொளி)
மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று முச்சக்கரவண்டியும் நாற்சந்தி ஒன்றில் மோதிக் கொண்டதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் திங்கட்கிழமை(20) இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றது.
இதன் போது குறித்த நாற்சந்தியில் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் பயணம் செய்தவர்கள் சந்தியில் கவனக்குறைவினால் விபத்திற்கு உள்ளாகியதை அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV கமராவின் காணொளியின் ஊடாக காண முடிந்தது.
அத்துடன் உள் வீதியில் மிக வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் தலைக்கவசம் இன்றி பயணிப்பதுடன் அவருக்கு சாரதி அனுமதி பத்திரம் உள்ளதா என்ற சந்தேகமும் முகநூலில் உள்ள நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.குறித்த சந்தியில் மோதிய இரு வாகனங்களும் நாற்சந்தி என்று பாராது கவனக்குறைவினால் தத்தமது வாகனங்களை செலுத்தியதை அவதானிக்க முடிந்தது.
மேலும் இவ்விபத்தில் காயமடைந்த இருவரும் அருகில் உள்ள நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாக விபத்தில் நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.
மேலும் இவ்வாறான நாற்சந்தியில் விழிப்பூட்டல் சமிஞ்சைகள் இருந்தும் விபத்துக்கள் இடம்பெற்று வருவதால் வேகத்தடை முறைமையினை நான்கு திசைகளிலும் அமைக்குமாறு பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.