;
Athirady Tamil News

கபில சந்திரசேன இறுதியில் கூறிய வார்த்தை ; மரணத்திற்கு முதல் நாள் இரவு நடந்தது இது தான் ; வெளியான பகீர் தகவல்

0

“நான் வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகிறது. இவர்கள் மீண்டும் என்னை உள்ளே (சிறைக்கு) அனுப்பப் பார்க்கிறார்கள் என்று கபில சம்பவம் நடந்த அன்று இரவு என்னிடம் இருமுறை கூறினார்” என முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரண விசாரணை குறித்த சாட்சியமளிப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

எயார்பஸ் கொடுக்கல் வாங்கல்
எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் விளக்கமறியலில் இருந்து பிணையில் வந்திருந்த நிலையில் உயிரிழந்த கபில சந்திரசேனவின் மரண விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசந்த அமரசேன முன்னிலையில் நேற்று (12) நடைபெற்றது.

கபில சந்திரசேனவின் மனைவியின் சகோதரியின் கணவரே அரவிந்த டி சில்வா என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று பிற்பகல் 2 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வழக்கில், கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.

அதற்கமைய, மேலதிக அறிக்கையுடன் பிரேதப் பரிசோதனை தொடர்பான இரு இணைப்புகளையும் பொலிஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அதற்கமைய, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெறப்பட்ட இரண்டு இரத்த மாதிரிகளை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பி அறிக்கை கோர அனுமதிக்குமாறு பொலிஸார் கோரியிருந்தனர்.

அத்துடன், கபிலவின் அலைபேசி ‘Face ID’ (முக அடையாளம்) மூலம் பூட்டப்பட்டுள்ளதால், அதனைத் திறக்க அந்த அலைபேசி தயாரிப்பு நிறுவனத்துக்கு அல்லது உரிய நிறுவனத்துக்கு அனுப்பித் தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடுமாறும் கோரப்பட்டது.

சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டி, அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதா என நீதிமன்றம் வினவியது. அதற்கு, அது தற்போது நீதிமன்ற சான்றுப் பொருளாக உள்ளதாகவும், விரைவில் பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதவான் வினவியபோது, சம்பவ இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சில மருந்துகள் மற்றும் இனங்காணப்படாத மாத்திரைகள் குறித்து காவல்துறை பதிலளிக்கையில், அவை பிரேதப் பரிசோதனை செய்த மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், பின்னர் அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர்.

முதலாவதாக சாட்சியமளித்த கபில சந்திரசேனவின் மனைவியின் சகோதரி பிரியங்கி அனுஷ்கா விஜயநாயக்க, கபில இறப்பதற்கு முந்தைய இரவு மகிழ்ச்சியாக இருக்கவில்லை என்று கூறினார்.

“எனது தங்கை மற்றும் பிள்ளைகள் அவுஸ்திரேலியாவில் வசிக்கின்றனர். கபில அமைதியான சுபாவம் கொண்டவர். மே 6ஆம் திகதி அவர் பிணையில் வந்ததாகக் கூறி எமது வீட்டுக்குத் தனியாக வந்தார். மறுநாள் மாலை அவர் மீண்டும் எமது வீட்டுக்கு வந்தபோது ஒரு திறப்பை என்னிடம் கொடுத்து, தனது வாகனத்தை வீட்டிற்கு கொண்டு வந்துவிடுமாறு கூறினார். அன்று இரவு சட்டத்தரணிகளை சந்தித்துவிட்டு இரவு 10 மணிக்குத் திரும்பினோம். கபில உணவருந்தவில்லை. இரவு 11 மணிக்கு அவர் உறங்கச் சென்றார். மறுநாள் காலை 7 மணியளவில் அவரது அறைக்கதவு திறக்கப்படாததால், ‘மற்று திறப்பு’ மூலம் கதவைத் திறந்தோம். அவர் கட்டிலில் இருக்கவில்லை. அறையில் ஏதோ விபரீதம் நடந்துள்ளதை நான் உணர்ந்தேன். அவர் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.” என சாட்சியமளித்தார்.

இதனைத் தொடர்ந்து மூன்றாவது சாட்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா சாட்சியமளித்தார்.

“கபில பிணையில் வருவதற்குத் தேவையான ஆவணங்களைச் சரிசெய்ய நான் உதவினேன். மே 7ஆம் திகதி காலை எனக்கு அழைப்பு விடுத்து நன்றி கூறினார். அன்று மதியம் அவருக்கு மீண்டும் நீதிமன்றப் பிரச்சினை இருப்பதாகக் கேள்விப்பட்டு, அவரை எமது வீட்டிற்கு வரச் சொன்னேன். அன்று இரவு அவர் தனது வீட்டுக்குச் சென்று மருந்துகள் மற்றும் ‘ஜிம் மேட்’ (Gym Mat) ஒன்றைக் கொண்டு வருமாறு தனது பணியாளருக்குக் கூறினார். ‘எதற்காக ஜிம் மேட்?’ என்று நான் கேட்டபோது, உடைகளைத் தொங்கவிட அது தேவை என அவர் கூறினார். அந்த இரவு அவர் என்னிடம், ‘நான் வெளியே வந்து ஒரு நாள்தான் ஆகிறது, மீண்டும் என்னை உள்ளே தள்ளப் பார்க்கிறார்களே’ என்று கவலையுடன் கூறினார். நான் அவரைத் தேற்றினேன். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர் கதவைத் திறக்கவில்லை. சட்டத்தரணியுடன் சேர்ந்து கதவைத் திறந்து பார்த்தபோது, அறையில் ஏதோ ஒன்று தொங்கிக்கொண்டிருப்பதை மட்டும் கண்டேன். மருத்துவர் வந்து அவர் இறந்துவிட்டதை உறுதிப்படுத்தினார்.

” இந்த மரண விசாரணை தொடர்பான ஏனைய 5 சாட்சிகளின் விசாரணைகள் எதிர்வரும் 14ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.