எரிபொருள் விலையேற்றம் ; அதிகரித்த மற்றுமொரு போக்குவரத்து கட்டணம்
எரிபொருள் விலையேற்றத்தை தொடர்ந்து கொள்கலன் போக்குவரத்து கட்டணம் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேவையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த கட்டண அதிகரிப்பை அமுல்படுத்தியுள்ளதாக கொள்கலன் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சு தெரிவித்தார்.
ஏற்றுமதித் துறை
கொழும்பில் திங்கட்கிழமை (1) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலை திருத்தங்கள் காரணமாக டீசல் விலை சுமார் 25 ரூபாவினால் அதிகரித்துள்ளது. அதனுடன் இணைந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகளும் கணிசமான அளவு உயர்ந்துள்ளது.
லூப்ரிகண்ட் எண்ணெய் , டயர்கள் மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் உள்ளிட்ட போக்குவரத்துத் துறைக்கு அத்தியாவசியமான பொருட்களின் விலை உயர்வு மற்றும் பராமரிப்புச் செலவுகள் அதிகரிப்பு காரணமாகவே இந்த கட்டணத் திருத்தத்தை மேற்கொள்ள தீர்மானித்துள்ளோம்.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையின் தொடர்ச்சியான செயல்பாட்டைப் பேணுவதற்கு கொள்கலன் போக்குவரத்து வாகனங்களை முறையாகப் பராமரிப்பது அவசியமானது தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் அந்தச் செலவுகளும் அதிகரித்துள்ளது.
அதற்கமைய கொள்கலன் போக்குவரத்து சேவைகளுக்கான கட்டணங்கள் திங்கட்கிழமை (1) முதல் 5 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன.
இறக்குமதி மற்றும் ஏற்றுமதித் துறையைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு இந்த லொறி வாகனங்களின் பராமரிப்புச் சேவைகளை கட்டாயமாகப் பேண வேண்டும்.
ஏனெனில், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சூழ்நிலையுடன் பராமரிப்புச் சேவைகளுக்கான செலவுகளும் அதிகரித்துள்ளன.
இந்த அனைத்துக் காரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு கட்டணத்தை அதிகரித்துள்ளோம். எதிர்வரும் காலப்பகுதிகளில் எரிபொருள் விலைகள் குறைவடைந்தால் கட்டணங்களை குறைப்போம் என்றார்.