;
Athirady Tamil News

மியான்மரில் சக்திவாய்ந்த வெடிவிபத்து: 45-க்கும் மேற்பட்டோர் பலி!

0

மியான்மரில், சுரங்கப் பணிகளுக்காக சேமித்து வைக்கப்பட்ட வெடிபொருள்கள் வெடித்ததில் 45-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மியான்மரின் நம்காம் நகரில் உள்ள காங்டப் கிராமத்தில் இன்று மதியம் பெரிய வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. சுரங்கப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருள்கள் அங்கிருந்த ஒரு கட்டிடத்தில் பெருமளவில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அது வெடித்ததில் மிகப்பெரிய விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், 45-க்கும் மேற்பட்டோர் பலியாகி 70-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மியான்மரில் அரசுக்கு எதிராக ஆயுதச் சண்டைகளில் ஈடுபட்டு வரும் இனக்குழுவான ’டாங் தேசிய விடுதலைப் படையின்’ கட்டுப்பாட்டில் உள்ள இந்த இடம் சீன எல்லையிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

வெடிவிபத்து ஏற்பட்ட இடத்தில் மீட்புப் படையினர் பலியானோரின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வெடிவிபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகிலுள்ள 100-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்ததாகக் கூறப்படுகிறது.

சுரங்கப் பணிகள் மற்றும் பாறைகளை உடைக்கும் பணிகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் பெடிபொருள்கள் முறையற்று சேகரித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் நிலையில் இந்த விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.