;
Athirady Tamil News

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்!

0

நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்திய மாலுமிகள் 11 பேர் கப்பலுடன் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

மார்ஷல் நாட்டின் கொடியேந்திய இந்திய வர்த்தகக் கப்பல் போதைப்பொருள் (கொக்கைன்) கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அந்தக் கப்பலுடன் சேர்த்து 11 இந்திய மாலுமிகள் சிறைபிடிக்கப்பட்டனர்.

ஆறு மாதங்களுக்கு முன்பு 31.5 கிலோகிராம் கொகைனை மார்ஷல் தீவுகளில் இருந்து நைஜீரியாவின் அபாபா துறைமுகம் வழியே லாகோஸ் நகருக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த கப்பலின் கேப்டனான ஷர்மா ஷாஷி பூஷன் உடன் சேர்த்து இந்திய மாலுமிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

நைஜீரியாவின் தேசிய போதைப்பொருள் சட்ட அமலாக்க முகமை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

கைது செய்யப்பட்ட அனைவரும் குற்றவாளிகள் என இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு, போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்திய எம்வி அருணா ஹூல்யா கப்பலுக்கு 5.3 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ. 50 கோடி) அபராதம் விதித்து நைஜீரிய நீதிமன்றம் உத்தரவிட்டது.

குற்றவாளிகளில் 3 முக்கிய அதிகாரிகளுக்கு தலா ரூ.95 லட்சம் அபராதமும், மற்ற மாலுமிகளுக்கு தலா ரூ. 47.5 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதுபோக, அனைவரும் நைஜீரிய மதிப்பில் தலா ரூ. 7,000 அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொக்கைன் மற்றும் எந்தவொரு சட்டவிரோத கடத்தலுக்கும் இனி நைஜீரியா பாதுகாப்பான வழித்தடமாக இருக்காது என்ற வலுவான செய்தியை இந்தத் தீர்ப்பு வழங்கியிருப்பதாக நைஜீரிய போதைப்பொருள் தடுப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.