;
Athirady Tamil News

‘தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது’ – சீனா பதிலடி

0

பீஜிங்,

அமெரிக்காவில் விரைவில் நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து ஜனாதிபதி டிரம்ப் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் 25 நிமிடங்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “2020 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், என்னை தோற்கடிக்க சீனா பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டது. அமெரிக்காவின் 22 கோடி வாக்காளர்களின் விவரங்களை சீனா விலை கொடுத்து சட்டவிரோதமாகப் பெற்றது.

எனக்கு எதிராக எதிர்மறையான செய்திகளை எழுத, அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சீனா பெருமளவில் பணம் கொடுத்தது. நவம்பரில் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலை முன்னிட்டு, தேர்தல் நடைமுறையின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். மேலும், புதிய வாக்காளர் அடையாள அட்டை மசோதாவை நாடாளுமன்றம் ஏற்றுக்கொள்ளவேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், தேர்தல் தோல்வி தொடர்பான டிரம்ப்பின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என சீனா பதிலடி கொடுத்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லின் ஜியான் கூறுகையில், “சீனா மீதான டிரம்ப்பின் குற்றாச்சாட்டு முற்றிலும் கற்பனையானது. சீனாவை களங்கப்படுத்தும் நோக்கில் இந்த குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. அமெரிக்க தேர்தல்களில் தலையிடுவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, நாங்கள் ஒருபோதும் அவ்வாறு செய்ததில்லை.

சீனாவுக்கு எதிரான ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். அமெரிக்க அரசு தங்கள் நாட்டில் நடக்கும் தேர்தல்களில் சீனாவை ஒரு பிரச்சினையாக காட்டுவதை நிறுத்திவிட்டு, சீனா-அமெரிக்கா உறவுகளை வளர்ப்பதற்கு உகந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்” என்று தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.