கனடாவில் பயங்கர காட்டுத்தீ: இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
கனடாவின் ஓன்டோரியோ மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் சில நாள்களாக பரவிவரும் பயங்கர காட்டுத்தீ காரணமாக அந்நாட்டின் தலைநகரான ஒட்டாவா மற்றும் டொரண்டோ நகரங்களில் கடுமையான புகைமூட்டம் ஏற்பட்டுள்ளது.
காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து அனைவரும் முகக் கவசங்கள் அணிந்து வெளியே செல்கின்றனர். இதனால், அமெரிக்கா வரை புகைமூட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டொரண்டோ நகரில் ஜூலை 15 அன்று காற்றின் தரக் குறியீடு உலகின் பல முக்கிய நகரங்களை விடவும் மோசமடைந்துள்ளது. கனடா சுற்றுச்சூழல் மையம் வெளியிட்டுள்ள தரவுகளின் படி, டொரண்டோவில் காற்றின் தரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
ஒட்டாவாவில் காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை மற்றும் ஈரப்பதமுள்ள வானிலை காரணமாக வானம் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், ஒன்டாரியோவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ நடுவே கனடா ரயில் ஒன்று செல்லும் விடியோ சமுக ஊடகங்களில் வெளியாகி வைரலானது. கடந்த திங்களன்று (ஜூலை 13) ரயில் ஓட்டுநர் குழுவினரால் எடுக்கப்பட்ட அந்த விடியோவில், ரயிலின் இருபுறமும் உள்ள காட்டுப்பகுதி கடுமையாக பற்றியெரிந்து ரயில் பெட்டிகள் முழுவதும் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தன. ரயிலில் பயணித்த ஊழியர்கள் பாதுகாப்பாக உள்ளதாக கனடா ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ஒன்டோரியோவின் தென்மேற்கு பகுதியில் இன்றும், 800-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ தொடர்ந்து எரிந்துகொண்டிருப்பதாக அரசு இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மக்கள் அவசர நிலையில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். காட்டுத்தீ பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வீசும் காற்றின் திசை மற்றும் வேகம் காரணமாக புகைமூட்டம் இன்னும் சில நாள்கள் நீடிக்கும் என வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளில் கனடாவில் கனடாவில் வானிலை மாற்றம் கவலை அளிக்கும் விதமாக அமைந்துள்ளது.
உலகின் சராசரியை விட கனடாவில் இருமடங்கு வேகமாக வெப்பம் உயர்ந்து வருகிறது. அங்குள்ள ஆர்க்டிக் பகுதியில் உலக விகிதத்தை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகளவு வெப்பநிலை இருக்கிறது.
காட்டுத்தீ, வறட்சி, மற்றும் பேரழிவை உண்டாக்கும் வெள்ளம் ஆகியற்றின் காரணமாக கனடாவின் காலநிலை மிக மோசமாக மாறிவருகின்றது. இவை மேலும் தீவிரமடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரிகின்றனர்.