அம்பாறை மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளராக சிரேஷ்ட அதிகாரி எஸ். கரன் நியமனம்
பொது நிர்வாக அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள இந்நியமனத்திற்கு அமைய, அவர் செவ்வாய்க்கிழமை (04) அம்பாறை மாவட்ட செயலகத்தில் உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். அம்பாறை மேலதிக மாவட்ட செயலாளர் எஸ். ஜெகராஜன் முன்னிலையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையில் ஐந்தாம் ஆண்டு வரை கல்வி கற்ற இவர், தொடர்ந்து அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலையில் உயர்தரம் வரை பயின்று, கிழக்கு பல்கலைக்கழகத்தில் பொருளாதார விசேட சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுக் கொண்டார்.
பாடசாலைக் காலத்திலேயே நிர்வாக சேவை அதிகாரியாக வேண்டும் என்ற இலக்குடன் கற்ற இவர், இலங்கை நிர்வாக சேவைப் போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து உதவிப் பிரதேச செயலாளராகவும், பிரதேச செயலாளராகவும் திருக்கோவில், ஆலையடிவேம்பு, நாவிதன்வெளி மற்றும் வாகரை உள்ளிட்ட பல்வேறு பிரதேச செயலகங்களில் பணியாற்றியுள்ளார்.தொடர்ந்து, தொழில் அமைச்சின் உதவிச் செயலாளராகக் கொழும்பிலும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.
இக்கடமைப் பொறுப்பிற்கு முன்னர், கிழக்கு மாகாண சமூக சேவைத் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளராகக் கடமையாற்றிய காலப்பகுதியில், கிழக்கு மாகாணம் முழுவதும் மிகக் குறுகிய காலத்தில் பல்வேறு சமூக நலத் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
