அமெரிக்காவில் விழுந்து நொறுங்கிய விமானம் ; எட்டு பேர் பலி
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில், சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானிகள் மற்றும் ராணுவ வீரர்கள் உட்பட எட்டு பேர் பலியாகினர்.
அலாஸ்காவின் தலைநகரான ஆங்கரேஞ்சில் இருந்து, ‘செக்யூரிட்டி ஏவியேஷன்’ நிறுவனத்தின், ‘செஸ்னா 441’ இரட்டை இன்ஜின் கொண்ட விமானம் ஒன்று, கேப் நியூஎன்ஹாம் ரேடார் தள விமான நிலையத்துக்கு சென்றது.
இந்த விமானத்தை அமெரிக்க ராணுவத்தின் பொறியாளர் பிரிவினர் வாடகைக்கு எடுத்தனர்.
இதில், இரண்டு விமானிகள், இரண்டு ராணுவ பொறியாளர்கள் உட்பட மொத்தம் எட்டு பேர் பயணித்தனர்.
விமானம், கேப் நியூஎன்ஹாம் தளத்தை நெருங்கும் போது திடீரென விழுந்து நொறுங்கியது. இதில் பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது.