நைஜீரியா: கச்சா எண்ணெய் திருட முயன்ற 37 பேர் விஷவாயு தாக்கி பலி!
நைஜீரியாவில் கச்சா எண்ணெய் திருட முயன்ற 37 பேர் விஷவாயு தாக்கி பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் எண்ணெய் வளமிக்க ரிவர்ஸ் மாநிலத்தில் உள்ள கச்சா எண்ணெய் கட்டமைப்புகளில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் செய்யப்படும் பைப் லைன்களில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட குழாய்கள் மூலம் எண்ணெய் திருடப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், ஒக்கிரிகா பகுதியில் சட்டவிரோத குழாய்கள் வழியாக வியாழக்கிழமை (செப். 3) இரவு 200-க்கும் அதிகமான உள்ளூர்வாசிகள் சிறிய படகுகளில் வந்து கச்சா எண்ணெய்யைத் திருட முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, அதிக அழுத்தத்தால் கச்சா எண்ணெய் குழாய்களில் இருந்து விஷவாயு வெளியேறியதால் திருட்டில் ஈடுபட்ட பலரும் அங்கேயே மயங்கி விழுந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பெரும்பாலானோர் இளைஞர்கள் எனக் கூறப்படும் நிலையில், விஷவாயு தாக்கியதில் சிலர் அங்குள்ள ஆற்றில் மயங்கி விழுந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டோரில் பலருக்கும் சிகிச்சை பலனளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை 37 பேர் பலியானதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், உண்மையான பலி எண்ணிக்கை குறித்து ரிவர்ஸ் மாநில அதிகாரிகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
முன்னதாக, சர்வதேச நாடுகளைச் சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் நைஜீரியாவின் டெல்டா பகுதிகளில் கச்சா எண்ணெய் குழாய்கள் அமைத்துள்ளன. இதனால், அங்கு சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரம் இழந்து வறுமையில் வாடும் மக்கள் இதுபோன்ற திருட்டுச் சம்பவங்களில் ஈடுபடுவது வழக்கமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.