;
Athirady Tamil News

கல்முனை தமிழ்ப் பிரிவின் தரமுயர்வு? (கட்டுரை)

0

கிழக்கின் தமிழ் மக்கள் மத்தியிலுள்ள மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று கல்முனை (வடக்கு) தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமாகும். அப்பிரதேச செயலகம் இன்னமும் தரமுயர்த்தப்படவில்லை. உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தியதுடன் பல்வேறு நிர்வாக ரீதியான முயற்சிகளையும் அரசியல்வாதிகள், கல்முனை சிவில் சமூகத்தினர் மேற்கொண்டிருந்தபோதும் இதுவரையில் எதுவுமே நடைபெறவில்லை.

போராட்டங்களுக்கும் முயற்சிகளுக்கும் முடிவு கிடைக்காத நிலையில், தற்போது, இதுவரையில் அம்பாறை மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் ஒன்றாகக் காட்டப்பட்ட கல்முனை வடக்கு (கல்முனை தமிழ் பிரிவு) பொது நிர்வாக அமைச்சின் இணையத்தளத்திலிருந்து நீக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் க. கலையரசன் தெரிவித்திருந்தார். இது வெறுமனே கருத்தாகக் கொள்ளப்படாது, ஆராயப்பட வேண்டியதொன்றாக உள்ளது.

இராஜாங்க அமைச்சராக இருந்த எஸ். வியாழேந்திரன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக, புளொட் அமைப்பின் உறுப்பினராக இருந்த பொழுது, உண்ணாவிரதங்களையும் போராட்டங்களையும் நடத்தினார். கோட்டாபய அரசாங்கத்தில் அவரால் கல்முனை பிரதேச செயலகத்தினைத் தரமுயர்த்திக் கொடுக்க முடியவில்லை. ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றபொழுது, ஜனாதிபதி தெரிவாகி ஒருவாரத்தில், கல்முனை தமிழ்ப் பிரிவு, தரம் உயரும் என்று முழக்கமிட்டார். இப்போது, ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருக்கிறார். வியாழேந்திரன் எந்தவோர் அமைச்சராகவும் இல்லை. அடுத்தவர், விடுதலைப் புலிகளின் கிழக்கு தளபதியாக இருந்து, அவ் அமைப்பிலிருந்து பிரிந்து அரசுடன் இணைந்து, பிரதி அமைச்சரான கருணா எனும் வி. முரளிதரன், கல்முனை விடயத்தில் பல உறுதிகளைக் கூறியிருந்தார்; ஒன்றும் நடைபெறவில்லை. கடந்த தேர்தலில், கல்முனை தமிழ்ப் பிரிவைத் தரமுயர்த்துவேன் என்ற தேர்தல் அறைகூவலுடனேயே போட்டியிட்டார். அவரது இந்த உறுதியை நம்பி வாக்களித்த மக்களுக்கு அம்பாறைக்கு தமிழ்ப் பிரதிநிதித்துவமே இல்லாமல் போனது. தமிழரசுக் கட்சியின் அப்போதைய செயலாளர் க.துரைராஜசிங்கம், தற்றுணிவில் தேசியப் பட்டியலில் கலையரசனை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருந்தார்.

‘நடைபெறுபவை எல்லாம் நாசமறுப்பாகவே இருக்கின்றன’ என்பது போன்று, கல்முனை தமிழ்ப் பிரிவுக்கான துருப்புச் சீட்டை முஸ்லிம் அரசியல்வாதிகள் ஏதோ ஒரு வகையில் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள். தமிழர் அரசியலில், அரசுடன் தமிழ்ப் பிரதிநிதிகள் இணைவதும், தமிழர்கள் இணைந்து அமைச்சர்களாக இருப்பதும் ஒன்றும் வரலாற்றில் நடக்காத ஒன்றல்ல. இதுவும் கடந்தே போனதுதான் வரலாறு. இருக்கும் வரைக்கும் இருப்போம் முடிந்தவரைக்கும் உழைப்போம். ஏதோ காலம் கடத்துவோம் என்று வாழும் அரசியல் வாழ்க்கைக்குப் பெயர், ஆளும் கட்சியென்று மகிழ்ச்சி கொள்வோம். தம்மால் முடியாமல் போனதற்கு தமிழ்த் தேசிய தரப்பு மீது குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார்களே தவிர, வேறு ஒன்றும் நடைபெறவில்லை.

நாட்டில் இருக்கின்ற நிர்வாக நடைமுறைக்கு மாறாக, கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்றைய பொருளாதார நிலைமைகளை விட, மிக மோசமானதொரு ‘மாபியா’ச் செயற்பாடு கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பது, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசனின் குற்றச்சாட்டு.

கல்முனை வடக்குப் பிரதேச செயலகப்பிரிவில், 29 கிராம சேவையாளர் பிரிவுகள் இருக்கின்றன. இந்தக் கிராம சேவையாளர் பிரிவுகள் அனைத்தும் பழம்பெரும் கிராமங்களை உள்ளடக்கிய பிரதேசங்களாகும். அவ்வாறிருக்கின்ற அந்த எல்லைகளை, கல்முனை தெற்குப் பிரதேச செயலகத்தோடு நிலஅளவை செய்து, கல்முனை வடக்குப் பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட கிராம சேவையாளர் பிரிவுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கின்றார்கள்.

“இவ்வாறானதொரு மோசடி, எமது கல்முனை வடக்குப் பிரதேசத்திலே தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கின்றது. கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தில் நிர்வாக ரீதியாக இருக்கின்ற உத்தியோகத்தர்களுக்குத் தெரியாமல் இந்த விடயங்கள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. உண்மையிலே இது பாரிய மோசடியாகும்” என்பதும் பாராளுமன்ற உறுப்பினரது குற்றச்சாட்டு.

கிராமங்களின் வீதிகளின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களும் சிங்கள மக்களும் வாழ்ந்த பிரதேசம், தற்போது ‘இஸ்லாமாபாத்’ என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள், கல்முனையில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்ற விடயமாக இருக்கின்றன. நாட்டில் இருக்கின்ற நிர்வாக நடைமுறைக்கு மாறாக, இப் பிரதேச செயலகப் பிரிவில் மாத்திரம் மோசடி நடைபெறுவதாகவே குற்றம்சாட்டப்படுகிறது.

அதேநேரத்தில், கல்முனை வடக்குப் பிரதேச செயலகத்தின் செயற்பாடுகளை முடக்கும் நோக்கில், கல்முனை காணிப் பதிவகத்தில் கல்முனை வடக்குப் பிரதேச காணிப் பதிவேட்டினை இரத்துச் செய்து, பதிவாளர் நாயகத்தினால் கட்டளையொன்று பிறப்பிக்கப்பட்டு, பல வடங்களாக இயங்கி வந்திருக்கின்ற காணி நிர்வாக நடைமுறை இரத்துச் செய்யப்பட்டிருக்கிறது.

மிகக் குறைவான கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக பிரதேச செயலாளர் பிரிவுகள் காணப்படுகின்ற போதும், 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டுள்ள கல்முனை வடக்கு உப பிரதேச செலகமாகவே இருந்துவந்தது. இருந்தாலும் அது கூட இல்லாமல் செய்யப்பட்டு கல்முனை தெற்குடன் இணைக்கின்ற ஏற்பாடு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை மட்டுமல்ல, கிழக்கிலுள்ள தமிழ் மக்களனைவரையும் கவலைக்குள்ளாக்கும் செயலாகும்.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம், 1989இல் சுற்றுலா உதவி அரசாங்க அதிபர் பிரிவாக இயங்கி 1993ஆம் ஆண்டு முதல் இற்றை வரை, உப பிரதேச செயலகமாக இயங்குகிறது. காணி, நிதிவளம் அற்றதாக இயங்கும் இப்பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமிப்பு இதுவரையில் நடைபெறவில்லை. ‘சாண் ஏற முழம் சறுக்கும்’ தமிழர் அரசியலில், கடந்த நல்லாட்சியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் வலுப்பெற்ற வேளை, ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையிலான முரண்பாடு, ஈஸ்டர் தாக்குதல், பிரதமர் மாற்றம், ஆட்சிக்குழப்பம் உள்ளிட்ட பல, சாத்தியங்களைக் குழப்பியடித்தது.

ஏற்கெனவே, 1993இல் அமைச்சரவை ஒப்புதல் கிடைத்து, அவ்வேளையில் நாட்டில் ஏனைய பகுதிகளில் இருந்த உப பிரதேச செயலகங்கள், பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன. அதற்குப் பின்னர், பல பிரதேச செயலகங்கள் புதிதாக உருவாக்கப்பட்டும் இருக்கின்றன. இவ்வாறான நிலையில், கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகமே நிறைவுபெறாத ஒன்றாக உள்ளது.

கல்முனை தமிழ்ப் பிரிவு, 30 வருடங்களை தாண்டியும் நிறைவேறாத கனவாகவே இருந்து கொண்டிருக்கிறது. இதனை வைத்தே, முஸ்லிம் அரசியல்வாதிகளும், சில தமிழ் அரசியல்வாதிகளும் தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள்; காலத்தையும் கடத்துகிறார்கள்; மக்களையும் ஏமாற்றுகிறார்கள். ஆனால், யதார்த்தத்தினைச் சொல்வதற்கும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும்தான் ஆட்களில்லை. அந்தவகையில், கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் தொடர்பில் அரசியல் தலைவர்களது நடவடிக்கைகள் தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமையை குலைப்பதாகவே அமைந்திருக்கிறது. நடைபெற்ற உண்ணாவிரதங்களும் அறிக்கைகளும் போராட்டங்களும் உத்தரவாதங்களும், இதுவரையில் எதனையும் சாதித்துவிடவில்லை.

அதன் தொடர்ச்சியாகத்தான் கல்முனையில் கடந்த சில வாரங்களாக உருவாகியிருக்கின்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்கள் வழங்கப்படாமல், திட்டமிட்டு தடுக்கப்படுவது கவலையானதே! இவ்வாறான சம்வங்களும் இன முறுகல் நிலைகளும் உருவாகாமல் தடுக்க, கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை வழங்கி, மக்கள் தங்கள் சேவைகளை வினைத்திறனாகவும் பாதிப்பின்றியும் பெறுவதற்கு, அரசாங்கம் தீர்வைக்காண வேண்டும் என்பதே எல்லோரினதும் அவாவாகும்.

அடிக்கடி ஒரு பொறி விழுவதும், அது பெருந்தீயாகப் பற்றி எரிவதும் பின்னர், தானாக அணைவதுபோன்று ஆகிவிடுவதைத் தான் தமிழ் மக்கள் தொடர்சசியாகக் கண்டு வருகின்றார்கள். ‘பிட்டும் தேங்காய்ப்பூவும் போல’ என்று பொது வெளியில் பேசிக்கொண்டு, உள்ளே வேறுவிதமாகச் செயற்படும் பாங்கு, கிழக்கில் தமிழ் – முஸ்லிம்களுக்கிடையில் இருக்கிறது என்பது வெளிப்படை. இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதே, அனைவருடையதுநிலைப்பாடாகும்.

இலங்கையில் இனப்பிரச்சினை உருவான வேளை ‘சிறுபான்மை’, ‘தமிழ்’ என்றிருந்த தமிழ் – முஸ்லிம் மக்கள், காலப்போக்கில் பிரிந்து இருதுருவங்களானார்கள். அதன்பின்னர்தான் ‘தமிழ்பேசும்’ என்று மாற்றம் பெற்றது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போதும் தமிழர் தரப்பு அவற்றையெல்லாம் மறந்து சகோதரர்களாக வாழ்வோம் என்றே சொல்கிறார்கள்; முயற்சி செய்கிறார்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தீராத நம்பிக்கையாக இருக்கின்ற முஸ்லிம்களின் இணக்கப்பாட்டுடன் கல்முனை தமிழ்ப்பிரிவு பற்றிய பிரச்சினை முடிவுக்குவர வேண்டும். அரசியல் தீர்வு விடயத்திற்கு மத்திய அரசில் இருக்கின்ற அதிகாரங்கள், அதிகமாகப் பகிர்வு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து ஓங்கி வருகின்றது.

இந்த நிலையில், மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கும், அபிவிருத்திகளை மேம்படுத்துவதற்கும் பிரதேச செயலகங்கள், மாகாண சபைகள், உள்ளுராட்சி சபைகளுக்கு முறையே நிர்வாக அதிகாரங்களையும், அரசியல் அதிகாரங்களையும் பரவலாக்கம் செய்தாக வேண்டும். இது காலத்தின் கட்டாய தேவையாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.