;
Athirady Tamil News

தொங்கு உள்ளூராட்சி சபைகளின் எதிர்காலம்

0

எம்.எஸ்.எம்.ஐயூப்

கடந்த 6ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகள் மறக்கப்பட்டு எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத சபைகளின் பக்கமே அரசியல் ஆர்வம் உள்ளவர்களின் கவனம் தற்போது திரும்பியுள்ளது.

ஏனெனில், கட்சிகள் அறுதிப் பெரும்பான்மையை வென்ற சபைகளின் நிர்வாகத்தை எந்தக்கட்சி நிறுவப் போகிறது என்ற கேள்வி எழுவதில்லை. அறுதிப் பெரும்பான்மை பெற்ற கட்சி சம்பந்தப்பட்ட சபையின் நிர்வாகத்தைக் கைப்பற்றிக் கொள்ளும்.

ஆனால், ஒரு கட்சி ஒரு சபையின் மொத்த ஆசனங்களில் ஆகக் கூடுதலானவற்றைக் கைப்பற்றிக் கொண்டாலும், 50 சதவீத ஆசனங்களை அடையாவிட்டால் நிலைமை என்னவாகும் என்பதே தற்போது எழுந்துள்ள கேள்வியாகும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையிலேயே நடைபெறுகின்றன. அதன்படி சகல கட்சிகளும் தத்தமது உள்ளூராட்சி மன்றத்தில் தொகுதி வாரியாக போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் ஒன்றையும் மேலதிக
வேட்பாளர் பட்டியல் ஒன்றையும் சமர்ப்பிக்க வேண்டும்.

அத்தேர்தலின் போது, வாக்காளர்கள், அம்மன்றங்களின் தேர்தல் தொகுதிகளுக்காகப் போட்டியிடும் வேட்பாளர்களுக்கே வாக்களிக்கின்றனர். அதன் மூலம் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தொகுதி வாரியாக தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியும் உள்ளூராட்சி மன்ற பிரதேசத்தில் சகல தொகுதிகளிலும் பெற்ற வாக்குகளின் விகிதாசாரப்படி, அக்கட்சிகளுக்கு முழு உள்ளூராட்சி மன்றத்திலும் பெறும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

குறிப்பிட்டதொரு கட்சி தொகுதி வாரியாக பெற்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அக்கட்சிக்கு விகிதாசாரப்படி, கிடைக்க வேண்டிய மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை பார்க்கிலும் குறைவாக இருந்தால், அக்கட்சி தமது மேலதிக பட்டியலில் இருந்து அதற்காக உறுப்பினர்களை நியமிக்க முடியும்.

அதன்படி, அவ்வாறு நியமிக்கப்படும் உறுப்பினர்களின் பெயர்களை
ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு அரசியல் கட்சிகளுக்கு அறிவித்துள்ளது.

ஒரு கட்சி தொகுதி வாரியாக பெற்ற ஆசனங்களின் எண்ணிக்கை தமக்குரிய மொத்த ஆசனங்களின் எண்ணிக்கையைப் பார்க்கிலும் கூடுதலாக இருந்தால் அக்கட்சி மேலதிக பட்டியலில் இருந்து உறுப்பினர்களை நியமிக்க முடியாது.

இவ்வாறு குறிப்பிட்டதோர் கட்சி பெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கை உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையில்
50 சதவீதத்துக்கு மேலாக இருந்தால் அக்கட்சி சபையின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ளும்.

எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாவிட்டால் சிக்கலான நிலைமை உருவாகும்.உதாரணமாக, கொழும்பு மாநகர சபையில் மொத்தம் 117 ஆசனங்கள் இருக்கின்றன.

அவற்றில் 48 ஆசனங்களைத் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி 29 ஆசனங்களையும் ஐக்கிய தேசிய கட்சி 13 ஆசனங்களையும் பெற்றுள்ளன. ஏனைய கட்சிகள் ஐந்துக்கும் குறைவான ஆசனங்களையே வென்றுள்ளன.

தேசிய மக்கள் சக்தி, ஆகக் கூடுதலான ஆசனங்களைக் கைப்பற்றினாலும் அக்கட்சிக்கு சபையில் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
ஏனைய கட்சிகள் பெற்ற ஆசனங்களின் மொத்த எண்ணிக்கை 69ஆக இருக்கிறது. ஆயினும், அக்கட்சிகள் கூட்டணியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.

தேர்தலின் பின்னராவது சபையில் கூட்டாக செயற்படுவதாக அக்கட்சிகள் இன்னமும் தமக்கிடையே உடன்பாடொன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் இல்லை.

இந்த நிலையில், சபையை நிர்வகிக்கப் போவது யார்? சபையின் தவிசாளராக, அதாவது அடுத்த கொழும்பு மேயராகப் போவது யார்?
நாட்டில் மற்றொரு முக்கிய மாநகர சபையான யாழ்ப்பாண மாநகர
சபையிலும் இந்த நிலையே நிலவுகிறது.

அங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈ.பி.டி.பியும் மற்றும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தலா 4 ஆசனங்கள் வீதமும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் தலா ஒரு ஆசனம் வீதமும் பெற்றுள்ளன.

அங்கும் முதலிடத்தை அடைந்த தமிழரசுக் கட்சியால் மாநகர ஆட்சியை நிறுவ முடியவில்லை. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அலுவல்கள் அமைச்சர் ஏ.எச்.எம்.எச்.அபேரத்ன, கடந்த பெப்ரவரி மாதம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் இம் முறை தேர்தலின் மூலம் தெரிவான உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் ஜூன் மாதம் 2ஆம் திகதி ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்கவும் கடந்த 13ஆம் திகதி அதனை அறிவித்து விட்டு அதற்கு முன்னர் அரசியல் கட்சிகள் தாம் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்ற மாநகர மற்றும் நகர சபைகளின் மேயர்களையும் பிரதி மேயர்களையும் பிரதேச சபைகளின் தவிசாளர்களையும் பிரதி தவிசாளர்களையும் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்குமாறு தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி, அறுதிப் பெரும்பான்மை பெறாத சபைகளின், குறிப்பாக, கொழும்பு மாநகர சபையின் நிர்வாகத்தை அக்கட்சி கைப்பற்றிக் கொள்வதைத் தடுக்க ஐக்கிய மக்கள் சக்தி பெரும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.

அதாவது தேசிய மக்கள் சக்தி அல்லாத சகல கட்சிகளும் ஒன்று சேர்ந்து அச்சபைகளின் தவிசாளர்களை நியமிக்க ஐக்கிய மக்கள் சக்தி பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது. ஏற்கனவே அக்கட்சியும் ஐக்கிய தேசிய கட்சியும் இந்த விடயத்தில் கொள்கையளவில் உடன்பாடு கண்டுள்ளதாக அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

கொள்கையளவில் என்றால், ஒன்றாய் செயல்பட விரும்புவதை மட்டுமே குறிக்கிறது. எவ்வாறு செயல்படுவது என்பதைப் பற்றி அவர்கள் இன்னமும் உடன்படவில்லை. கொழும்பு மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய தேசிய கட்சியும் ஒன்று சேர்ந்தாலும் அக்கட்சிகளால் மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது.

இவ்விரு கட்சிகளும் மொத்தம் 42 ஆசனங்களை மட்டுமே பெற்றுள்ளன.
அவற்றோடு ஏனைய சில கட்சிகளும் சிலவேளை இணையலாம். ஆயினும், தேசிய மக்கள் சக்தியை மாநகர சபையின் அதிகாரத்தைக் கைப்பற்ற இடமளிக்கக்கூடாது என்ற ஒரே காரணத்துக்காக ஒன்றிணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மற்றைய சகல கட்சிகளும் இல்லை.

அவை ஐ.தே.கவுக்கும் ஐ.ம.சவுக்கும் உதவி செய்வதாக இருந்தால், அதற்காக எதையாவது எதிர்பார்க்கலாம். சிலவேளை, பிரதி மேயர் பதவியை அல்லது வேறு ஏதாவது பதவியை எதிர்பார்க்கலாம். அல்லது பணத்தை எதிர்பார்க்கலாம்.
ஐ.தே.கவுக்கும் ஐ.ம.சவுக்கும் இடையிலும் கொள்கையளவிலான உடன்பாட்டுக்கு அப்பால் பதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் இன்னமும் பேச்சுவார்த்தைகள் நடைபெறவில்லை.

இவ்விரு கட்சிகளும் ஒன்றையொன்று வளர விடக் கூடாது அது தமக்கு ஆபத்தானது என்று கருதும் கட்சிகளாகும். தேர்தலுக்கு முன்னர் இணைந்து போட்டியிட வேண்டும் என இரு கட்சிகளினதும் பலர் கோரிக்கை விடுத்த போதிலும், இந்த பகை உணர்வின் காரணமாக. குறிப்பாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் நிலவும் கடும் பகை உணர்வின் காரணமாக அக்கட்சிகள் இணைந்து போட்டியிடவில்லை.

எனவே, தேசிய மக்கள் சக்திக்கு இடமளிக்காது கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றும் விடயத்திலும் இரு கட்சிகளும் ஒன்றையொன்று சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றன.

ஐ.தே.கவுக்கு கொழும்பில் மேயர் பதவியை விட்டுக் கொடுத்தால் அப்பதவியைப் பாவித்து ஐ.தே.க. தமது உறுப்பினர்களை வளைத்துப் போட்டுக்கொள்ளும் என்று ஐ.ம.ச. தலைவர்கள் நினைக்கலாம். இவ்வாறே ஐ.தே.க. தலைவர்களும் நினைக்கலாம். எனவே, இக்கட்சிகள் இணைந்து செயல்படும் வரை இணைந்து செயல்படும் என்று கூற முடியாது.

தேசிய மக்கள் சக்தி, உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இதுவரை நாட்டை ஆட்சி புரிந்த கட்சிகளோடு இணைவதில்லை என்றும் சுயேச்சைக் குழுக்களுடன் மட்டுமே இணையும் என்றும் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டணியின் பிரதான கட்சியான மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார்.

தம்மை விடக் குறைவாக ஆசனங்களைப் பெற்ற எந்த ஒரு கட்சிக்கும் ஏனைய கட்சிகளோடு இணைந்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கைப்பற்றத் தார்மிக உரிமை இல்லை என்று தேசிய மக்கள் சக்தி கூறுகிறது.

மக்கள் விடுதலை முன்னணியில் இருந்து பிரிந்து சென்றவர்களின் கட்சி ஒன்றான முன்னணி சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னமும் அக்கருத்தை ஆதரித்துப் பேசியிருந்தார்.

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளுடன் இணைந்து உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்ற அக்கட்சிக்குத் தார்மிக உரிமை இல்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் சில தலைவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், அதுவும் தமக்கும் பொருந்துகிறது என்பதை அவர்கள் சிந்திக்க வில்லை போலும்.

எவ்வாறாயினும், கட்சிகள் கூட்டாக உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகத்தைக் கைப்பற்றினாலும் கூட்டில் இருக்கும் சிறிய கட்சிகள் அடிக்கடி பல சிறப்புரிமைகளைக் கேட்டு மிரட்டி பெரிய கட்சிகளைப் பணயக் கைதிகளாக வைத்திருக்கும் சாத்தியம் அதிகமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.