;
Athirady Tamil News

யாழில்.கழிவுகளை கொட்டும் இடங்களில் சி.சி.ரி.வி பொருத்த நடவடிக்கை

0

யாழ்ப்பாணத்தில், கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான இனம் காணப்பட்ட இடங்களில் கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அதன் போதே கண்காணிப்பு கமரா (CCTV) பொருத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலர் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது மழை பொய்துவருவதால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பரவல் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். அதற்க்கு பொது மக்களுக்கான போதிய விழிப்புணர்வின் அவசியத்தினையும் எடுத்துக்கூற வேண்டும்.

அந்த விழிப்புணர்வு செயற்பாட்டிற்கு கிராம மட்ட உத்தியோகத்தர்களை வழிப்படுத்த பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கழிவகற்றல் தொடர்பாக சரியான பொறிமுறையின் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து இக் கூட்டத்தில் முன்னெச்சரிக்கையாக டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டது.\

பாடசாலைகளிலும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் டெங்கு பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெங்கு தாக்கத்தை கட்டுப்படுத்த பிரதேச செயலாளர் தமது பிரதேச செயலகங்களில் ஜீன் மாதம் முதல், மாதத்தின் 3வது புதன்கிழமை டெங்குக் கட்டுப்பாட்டுக் குழுக்கூட்டம் நடாத்துவதுடன் அதன் கூட்டக்குறிப்பு மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடப்பட வேண்டும்.

கிராம மட்ட டெங்குக் குழுக் கூட்டத்தினை ஜீன் மாதம் முதல் மாதத்தின் 1வது, 2வது செவ்வாய்க்கிழமைகளில் நடாத்துவதற்கும் அது தொடர்பான கூட்டக்குறிப்பு பிரதேச செயலாளருக்கு அறிக்கையிடப்பட வேண்டும்.

ஜீன் 1ஆம் திகதி முதல் முன்மாதிரியாக மாவட்ட செயலகம் மற்றும் பாடசாலைகளில் கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். அவ்வாறு தரம் பிரிக்காமல் காணப்படுமாயின் அதற்குரிய அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

யாழ் மாவட்டத்திலுள்ள ஏனைய திணைக்களங்கள் கால அவகாசத்திற்கு அமைய, ஜீலை 1ஆம் திகதி முதல் இந் நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

பிளாஸ்டிக், பொலித்தீனை கட்டுப்படுத்தல் தொடர்பான நடைமுறைகளை மத்திய சுற்றாடல் அதிகார சபையினர் பொதுமக்களுக்கு அது தொடர்பான சரியான அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும்.

கழிவுகளை வீதிளில் கொட்டுவதை குறைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக யாழ்ப்பாண மாநகர சபையினாலும், கோப்பாய் பிரதேச சபையினாலும் கண்காணிப்பு கமரா (CC TV) பொருத்துவது. போன்ற தீர்மானங்கள் கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இக் கலந்துரையாடலில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வலயக்கல்விப் பணிப்பாளர்கள் சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், கடற்படை மற்றும் இராணுவ அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.