;
Athirady Tamil News

காங்கிரஸ் கட்சியில் இருந்து கபில்சிபல் திடீர் விலகல்..!!

0

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில்சிபல்.

காங்கிரஸ் தலைமையை விமர்சித்த 23 அதிருப்தி தலைவர்களில் இவர் முக்கியமானவர் ஆவார். காங்கிரஸ் கட்சியின் நடைமுறையில் மாற்றம் தேவை, காந்தி குடும்பத்தை சேர்ந்தவர் யாரும் தலைமை வகிக்க கூடாது என்று கபில்சிபல் தெரிவித்து இருந்தார்.

பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்ததில் இருந்தே அவர் காங்கிரஸ் தலைமையை விமர்சித்து வந்தார். சமீபகாலமாகவே சோனியா காந்தியை அவர் கடுமையாக விமர்சனம் செய்தார்.

2024-ம் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு சோனியா காந்தி 3 குழுக்களை நேற்று நியமித்தார். இதில் எந்த குழுவிலும் கபில்சிபல் பெயர் இடம் பெறவில்லை. மற்ற அதிருப்தி தலைவர்களான குலாம்நபி ஆசாத், ஆனந்த் சர்மா ஆகியோர் இடம் பெற்று இருந்தனர்.

இந்த நிலையில் கபில்சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

இதைத் தொடர்ந்து கபில்சிபல் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் உத்தரபிரதேச மேல்சபை எம்.பி. பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார்.

சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், அந்த கட்சியின் எம்.பி. ராமகோபால் யாதவ் ஆகியோர் முன்னிலையில் அவர் மனு தாக்கல் செய்தார்.

பின்னர் கபில்சிபல் நிருபர்களிடம் கூறியதாவது:-

நான கடந்த 16-ந்தேதியே காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விட்டேன். எனது ராஜினாமா கடிதத்தை தலைமைக்கு அனுப்பி விட்டேன்.

நான் சமாஜ்வாடி கட்சி ஆதரவுடன் சுயேட்சையாக மேல்சபைக்கு மனு தாக்கல் செய்துள்ளேன். நாட்டில் சுயேட்சையாக குரல் கொடுக்க எப்போதும் விரும்பினேன். சுதந்திரமான குரலாக இருப்பதே முக்கியம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.