;
Athirady Tamil News

வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு

0

வெனிசுவேலா விவகாரம்: புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருள்களை மட்டுமே வெனிசுவேலா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுவேலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்துவதாக குற்றச்சாட்டை முன்வைத்து, அந்நாட்டின் மீது படையெடுத்த அமெரிக்கா, அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைக் கைது செய்து, நாடுகடத்தினர். தற்போது இருவரும் அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, வெனிசுவேலாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களில் அமெரிக்கா முதலீடு செய்யப் போவதாக அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக டிரம்ப் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

”புதிய எண்ணெய் ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம், வெனிசுவேலா இனி அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பொருள்களை மட்டுமே வாங்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்முதலில், அமெரிக்க விவசாயப் பொருள்கள், மருந்துகள், மருத்துவ சாதனங்கள், மின் கட்டமைப்பு மற்றும் எரிசக்தி துறை மேம்பாட்டுக்கு தேவையான பொருள்களும் அடங்கும்.

தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், வெனிசுவேலா தனது முதன்மைப் பங்காளராக அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்ய உறுதியளித்துள்ளது. இது புத்திசாலித்தனமான முடிவு. இது வெனிசுவேலா மற்றும் அமெரிக்க மக்களின் நலனுக்கு மிகவும் நல்லதாகும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக, வெனிசுவேலாவில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டுமென்றால், சீனா, ரஷியா, கியூபா நாடுகளுடனான உறவுகளை முறிக்க வேண்டும் என்று இடைக்கால அரசுக்கு டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.