;
Athirady Tamil News

விடுதலை செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் நளினி மேல்முறையீடு..!!

0

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி கைதாகி 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தாயாரின் உடல்நிலை காரணமாக நளினிக்கு தமிழக அரசு பரோல் வழங்கியுள்ளது. இதற்கிடையே ராஜீவ் கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் அவர் மனு செய்தார். இதை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, ‘பேரறிவாளனை சுப்ரீம் கோர்ட்டு அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது. அந்த சிறப்பு அதிகாரம் ஐகோர்ட்டுக்கு இல்லை. எனவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன’ என தெரிவித்தது. சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராகவும், அதற்கு தடை கோரியும் நளினி சார்பில் வக்கீல்கள் ஆனந்த்செல்வம், ஆனந்த் திலீப் லங்க்டே ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- நான் 30 ஆண்டுகளுக்கும் மேல் சிறையில் உள்ளேன். தனிமை சிறையில் அடைக்கப்பட்டு, கொடுமைகளையும், மன உளைச்சல், உடல் சுகவீனம் உள்ளிட்டவற்றையும் அனுபவித்துள்ளேன். வழக்கு நிலுவையில் இருக்கும்போது பேரறிவாளனை ஜாமீனில் விடுவித்தது போல, தன்னையும் ஜாமீனில் விடுவிக்க வேண்டும். அதன்பிறகு தனது மனுவை முழுவதுமாக விசாரித்து விடுதலை செய்ய வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய பரிந்துரைத்த தமிழக அரசின் பரிந்துரை பேரறிவாளனுக்கு மட்டும் பொருந்தாது. அனைவருக்கும் பொருந்தக்கூடியதே. எனவே அனைவருக்கும் விடுதலை பெறுவதற்கான உரிமை உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதே விவகாரம் தொடர்பாக ரவிச்சந்திரன் சுப்ரீம் கோர்ட்டில் கடந்த மாதம் மேல்முறையீடு செய்தது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.