;
Athirady Tamil News

அமெரிக்கா: இசைக் கச்சேரியால் வலிப்பு? 8 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

0

அமெரிக்காவின் தேவாலயத்தில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் பங்கேற்ற 8 குழந்தைகள், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹார்வர்டு பல்கலைக் கழகச் சதுக்கத்தில் உள்ள செயின்ட் பால்ஸ் தேவாலயத்தில், நேற்று முன்தினம் (ஜூலை 22) இரவு, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இசைக்குழுவொன்று கச்சேரி நடத்தியுள்ளது.

இதையடுத்து, அங்கு ஒரு குழந்தை வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு மீட்புப் படை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக அங்குச் சென்ற அதிகாரிகள் அந்தக் குழந்தைக்கு சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது, திடீரென, மேலும் 7 குழந்தைகளுக்கு வலிப்பு நோயின் அறிகுறிகள் தென்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த 8 குழந்தைகளும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

மேலும், அதிகாரிகள் அந்த தேவாலயம் முழுவதும் சோதனை மேற்கொண்டதில், காற்றில் எந்தவொரு அபாயகரமான பொருளும் கலக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, திடீரென குழந்தைகளின் உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து மர்மம் விலகாத நிலையில், அந்த இசைக் கச்சேரியில் கலந்துக் கொண்ட மற்ற 70-க்கும் மேற்பட்டோருக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.