;
Athirady Tamil News

பாகிஸ்தான் வெள்ளம்: பலி எண்ணிக்கை 234 ஆக உயர்வு!

0

பாகிஸ்தான் நாட்டைப் புரட்டியெடுத்த கனமழையால் மற்றும் வெள்ளத்தால் பலியானோரது எண்ணிக்கை 234 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானில் பருவமழை தீவிரமடைந்து, கனமழை பெய்து வருகின்றது. இதனால், அங்குள்ள நீர்நிலைகள் பெருமளவில் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில், பஞ்சாப் மாகாணம் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்நாட்டில் வெள்ளத்தால் பலியானவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கடந்த ஜூன் மாதத்தின் இறுதியில் இருந்து சுமார் 234 பேர் பலியாகியுள்ளதாக, பாகிஸ்தான் பேரிடர் மேலாணமைத் துறை இன்று (ஜூலை 23) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், வெள்ளத்தால் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்த பஞ்சாப் மாகாணத்தில் தற்போது வரை 135 பேர் பலியானதுடன், 470-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், அம்மாகாணத்தில் ஜூலை 22 முதல் 24 ஆம் தேதி வரை வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, செனாப், சிந்து மற்றும் ஜெலூம் ஆகிய நதிகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், முசாஃபர்நகர், டேரா காஸி கான், ரஹிம் யர் கான், ஜாங் மற்றும் நான்கானா சாஹிப் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இத்துடன், கனமழையால் பாகிஸ்தானின் பெரும்பாலான ஆறுகள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளதால், கைபர் பக்துன்குவா, கில்கிட் பல்டிஸ்தான் ஆகிய மாகாணங்களிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.