;
Athirady Tamil News

தமிழை மத்திய அலுவல் மொழியாக அறிவியுங்கள்: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் வலியுறுத்தல்..!!

0

ஆண்டுதோறும் செப்டம்பர் 14-ம் நாள் ‘இந்தி திவஸ்’ என்ற பெயரில் இந்தி மொழி நாள் கொண்டாடப்படுகிறது. அதற்கான விழாவில் பேசிய உள்துறை மந்திரி அமித்ஷா, “நமது கலாசாரம், வரலாற்றின் ஆன்மாவைப் புரிந்துகொள்ள நமது அலுவல் மொழியான இந்தியை நாம் கற்கவேண்டும்” என்றும், “நாட்டின் ஆட்சி நிர்வாகம், ஆராய்ச்சி ஆகியவை நம் உள்ளூர் மொழி மற்றும் அலுவல் மொழிகளில் நடக்க உறுதியேற்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். ஒரு மொழிக்குரிய நாளில் அதன் பெருமைகளையும், சிறப்புகளையும் எடுத்துரைப்பது இயல்பானது.

ஆனால், கலாசாரத்தையும், வரலாற்றையும் புரிந்துகொள்ள இந்தியை கற்றுக்கொள்ள வேண்டும் என்பது பல மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பாட்டுக்கு நேர் எதிரானது. இந்தியாவின் வரலாறும், பண்பாடும் இந்தி மொழியில் புதைந்திருக்கவில்லை. இந்தி என்ற மொழி உருவாவதற்கு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழை முதன்மை மொழியாக கொண்ட திராவிட மொழி குடும்பமும், அதன் பண்பாட்டு விழுமியங்களும் இன்றைய இந்திய நிலப்பரப்பையும், அதன் எல்லைகளை கடந்தும் பரவியிருந்ததை வரலாற்றாசிரியர்கள் பலரும் எடுத்துக்காட்டியுள்ளனர்.

இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கி தந்த பாரத ரத்னா டாக்டர் அம்பேத்கரும் இதன் அடிப்படையில் தனது ஆய்வு முடிவுகளை பதிவு செய்திருக்கிறார். இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து எழுதப்பட வேண்டும் என்பதே வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் முடிவு. அப்போதுதான் உண்மையான கலாசாரத்தையும், வரலாற்றையும் அறிந்துகொள்ள முடியும் என்பதை அழுத்தம், திருத்தமாக குறிப்பிட்டிருக்கிறார்கள். அத்தைகைய சிறப்புவாய்ந்த தமிழையும், மற்ற மாநில மொழிகளையும் பின்னுக்கு தள்ளி இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி என்ற கட்டமைப்பை உருவாக்க நினைப்பது ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். அந்த ஆதிக்க உணர்வை எதிர்த்து தாய்மொழி காத்திட தீக்குளித்து, தங்கள் இன்னுயிரை அன்னை தமிழுக்கு ஈந்த தியாக வரலாற்றைக்கொண்டது எங்கள் தமிழ்நாடு.

இந்தி சட்டப்படியான தேசிய மொழியும் அல்ல, அது மட்டுமே ஆட்சி மொழியும் அல்ல. மத்திய அரசின் அலுவல் மொழியாக இந்தி உள்ளது. அதுபோலவே, இணை அலுவல் மொழியாக ஆங்கிலம் உள்ளது. உள்துறை மந்திரி, இந்தியை உயர்த்திப்பிடிப்பதற்காக, ‘உள்ளூர் மொழி’களையும் தனக்கு கூட்டாளியாக சேர்த்துக்கொண்டு பேசியிருக்கிறார். இந்தி பேசும் மாநிலங்கள் என சொல்லப்படும் பகுதிகளில் பேசப்பட்டு வந்த மைதிலி, போஜ்புரி, சந்தாலி, அவதி உள்ளிட்ட பல மொழிகள் இந்தி மொழியின் ஆதிக்கத்தால் அழிவின் விளிம்பில் இருப்பதை மொழி அறிஞர்கள் ஆய்வுப்பூர்வமாக எடுத்துக்காட்டியிருக்கிறார்கள். அந்த மொழிகளை மீட்க, உள்ளூர் மக்கள் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் இன்றைய நிலை.

மலையளவு வேறுபாடு

அலுவல் மொழியான இந்தியின் ஆதிக்கத்தில் இருந்து தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் தனித்தன்மைமிக்க மொழிகளை காப்பதற்காக அரசியல் சட்டத்தின் வழியே போடப்பட்ட வேலிதான் இணை அலுவல் மொழி என்ற ஆங்கிலம். இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவகர்லால் நேரு அளித்த உறுதிமொழியின் காரணமாக அந்த வேலி இன்றளவும் வலுவாக இருப்பதால்தான் பல்லாயிரம் ஆண்டுகளாக இலக்கண-இலக்கிய வளத்துடன் செழித்து வளர்ந்து நிற்கும் செம்மொழியாம் தமிழ்மொழியை ஆதிக்க மொழி ஆடுகளால் மேய முடியவில்லை. உள்ளூர் மொழிகள் மீது மத்திய அரசுக்கு உண்மையான அக்கறை இருக்குமானால் சமஸ்கிருதம்-இந்தி மொழிகளின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும், தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கும் உள்ள மலையளவு வேறுபாட்டினை உணர்ந்து, அதனை சமன்படுத்துவதே சரியான நடவடிக்கையாக இருக்கும். அதற்கு மாறாக, தேசிய கல்வி கொள்கை வழியாக இந்தி-சமஸ்கிருத மொழிகளை திணிப்பதற்கான முயற்சிகளிலேயே மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது.

‘ஹிந்தி’யா

இது ஒருமைப்பாடு மிக்க இந்தியா. அதனை ‘ஹிந்தி’யா என்ற பெயரில் பிளவுபடுத்தி பார்க்கும் முயற்சிகள் வேண்டாம் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன். உள்ளூர் மொழிகள் பாதுகாக்கப்பட வேண்டுமென்றால், அரசியல் சட்டத்தின் 8-வது அட்டவணையில் தற்போது இடம்பெற்றுள்ள 22 மொழிகளை, உங்கள் வார்த்தைகளிலேயே சொல்லவேண்டுமென்றால் உள்ளூர் மொழிகளை இந்திக்கு இணையாக, மத்திய அரசின் அலுவல் மொழிகளாக விரைவில் அறிவியுங்கள். தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளை மத்திய அரசின் அலுவல் மொழிகளாக்கி, இந்தி தினத்துக்கு பதில் ‘இந்திய மொழிகள் நாள்’ என கொண்டாடி கலாசாரத்தையும், வரலாற்றையும் வலுப்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.