;
Athirady Tamil News

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பெருமிதம்: “எனது வாழ்வில் இது ஒரு பொன் நாள்” முதல்-அமைச்சர் பேச்சு..!!

0

எனது வாழ்வில் பொன் நாள் என்று சொல்லத்தக்கக்கூடிய வகையில் இந்த நாள் அமைந்திருக்கிறது. பசித்த வயிறுகளுக்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக, திக்கற்றவர்களுக்கு திசைகாட்டியாக, யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருக்க போகும் கருணை வடிவான திட்டம்தான் இந்தக் காலை உணவு வழங்கும் திட்டம். பள்ளிக்குப் பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்லக் கூடிய வசதியை நாம் ஏற்படுத்தி தந்திருக்கிறோம். இந்த சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்பு நிலை மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களின் ஆதிமூலத்தை அறிந்து தீர்வுகள் காணப்பட வேண்டும். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இன்று காலை உணவுத் திட்டத்தை ஆதிமூலம் தொடக்கப்பள்ளியில் இருந்து நாம் தொடங்கி இருக்கிறோம். இந்தப் பள்ளி அமைந்துள்ள இடம் கீழ் அண்ணா தோப்பு. என்ன பொருத்தம் பாருங்கள்.

நூற்றாண்டுக்கு பிறகு
கடந்த 102 ஆண்டுகளுக்கு முன்னால், செப்டம்பர் மாதம் 16-ம் நாள் நீதிக்கட்சி தலைவர்களுள் ஒருவராக இருந்த தியாகராயரால் சென்னை மாநகராட்சியில் குழந்தைகளுக்கு மதிய உணவுத்திட்டம் அறிமுகப்படுத்தும் தீர்மானத்தை இயற்றினார். சரியாக ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர், இன்றைய விழாவில் காலை உணவுத் திட்டம் தொடங்கப்படுகிறது.

பிள்ளைகளுக்குக் கல்வியுடன் சேர்த்து உணவும் வழங்க வேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கத்தை முதலில் வெளிப்படுத்தினார், பண்டித அயோத்திதாசர். அவரது சிந்தனையில் இது உதித்தது. கடந்த 1900-ம் ஆண்டின் தொடக்கக் காலத்தில் சென்னை வட்டாரத்தில் உருவாகிய கர்னல் ஆல்காட் பள்ளிகளில் மதிய உணவு வழங்க வேண்டும் என்ற சிந்தனைக்கு வித்திட்டார் பண்டிதர் அயோத்திதாசர்.

திராவிட இயக்கத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக இருந்த வெள்ளுடை வேந்தர் தியாகராயர், சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது, ஆயிரம் விளக்கு மாநகராட்சிப் பள்ளிப் பிள்ளைகளுக்கு மதிய உணவை வழங்கினார். அந்த ஆயிரம் விளக்கில் இருந்துதான் முதன்முதலாக நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் என்பதும் எனக்குக் கிடைத்த மகிழ்ச்சி.

காமராஜர், கருணாநிதி, எம்.ஜி.ஆர். இந்தியா
விடுதலை அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நிதி நெருக்கடியைக் காரணமாக காட்டி ஆங்கிலேய அரசால் மதிய உணவுத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதற்கு பிறகு 1955-ம் ஆண்டு காமராஜர் முதல்-அமைச்சராக இருந்த நேரத்தில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.

இத்தகைய மதிய உணவுத் திட்டத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து நடத்தியது. ஆட்சிப் பொறுப்பை ஏற்றதற்கு பிறகு. இதனை செழுமைப்படுத்தும் வகையில் கூடுதலாக ஊட்டச்சத்து திட்டத்தை 1971-ம் ஆண்டு முதல்-அமைச்சராக இருந்த தலைவர் கருணாநிதி கையில் எடுத்தார்.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் ஊட்டச்சத்து வழங்குவதை மாபெரும் இயக்கமாக உருவாக்கி தந்தார். அந்தக் காலத்தில் பேபி ரொட்டி என்பதை குழந்தைகள் அனைவருக்கும் வழங்கியது நம்முடைய அரசு. 1975-ம் ஆண்டு முழுமையாக மாநில அரசின் நிதியில், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து திட்டத்தை முதல்-அமைச்சர் கலைஞர் மாநிலம் முழுவதும் நடத்திக்காட்டினார். இதனை மேலும் விரிவுபடுத்த பெருமுயற்சி எடுத்தார் எம்.ஜி.ஆர். அதிகப்படியான மையங்களை உருவாக்கி, சத்துணவு திட்டத்துக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்தார்.

சத்துணவில் முட்டை
எம்.ஜி.ஆருக்கு பிறகு 1989-ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்புக்கு வருகிறது. தலைவர் கருணாநிதி, 1989-ம் ஆண்டு ஆட்சிக்கு. வந்த உடனேயே சொன்னார், “சத்துணவுத் திட்டத்தை நான் நிறுத்திடுவேன் என்று சொன்னார்கள். ஆனால், உண்மையான சத்துணவை வழங்கப்போகிறேன் என்று சொல்லி, 1989-ல் முதலில், வாரந்தோறும் ஒரு முட்டை, பின்னர் இரண்டு முட்டையும் வழங்கப்படும்” என்று அறிவித்தார். கடந்த 2007-ம் ஆண்டு வாரத்துக்கு 3 முட்டை வழங்கினார். அத்துடன் கொண்டைக் கடலை, பச்சைப்பயிறு, வேகவைத்த உருளைக் கிழங்கு ஆகியவற்றையும் சேர்த்துக் கொடுத்தார்.

2010-ம் ஆண்டு வாரம் 5 நாட்களும், சனி, ஞாயிறு தவிர, முட்டை வழங்கினார். முட்டை சாப்பிடாதவர்களுக்கு ஏதாவது கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து, வாழைப்பழமும் வழங்கினார். பின்னர் முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் கலவை சாதமாக வழங்க உத்தரவிட்டார். வரலாற்று சிறப்புமிக்க திட்டம் ஆனால், இதுவரை இருந்தவை அனைத்தும் மதிய உணவுத் திட்டங்கள். ஆனால் காலையிலும் உணவு வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை தி.மு.க. அரசு இப்போது தொடங்கி இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.