;
Athirady Tamil News

கொடநாடு கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றம்..!!

0

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி படுகொலை செய்யப்பட்டார். எஸ்டேட் அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள் முக்கிய ஆவணங்களை கொள்ளையடித்து சென்றுவிட்டனர். கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த இந்த சம்பவம் தொடர்பான வழக்கு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்காகும். இந்த வழக்கில் ஏற்கனவே 10 பேர் கைது செய்யப்பட்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டு விட்டது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட முக்கிய குற்றவாளி கனகராஜ் விபத்தில் இறந்துபோனார். இந்த சம்பவம் இந்த வழக்கில் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியது.

இந்த நிலையில் கோர்ட்டு உத்தரவின் பேரில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மேற்கு மண்டல ஐ.ஜி.சுதாகர் நேரடியாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினார். சசிகலாவிடம் ஐ.ஜி.சுதாகர் நேரடியாக சென்னை வந்து விசாரித்தார். இந்த வழக்கின் மறுவிசாரணையில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு நேற்று மாற்றப்பட்டது. டி.ஜி.பி. சைலேந்திரபாபு இதற்கான உத்தரவை பிறப்பித்தார். வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் உடனடியாக விசாரணையை தொடங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.