12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் விபரீத முடிவு

12-ம் வகுப்பில் மகன் குறைவான மதிப்பெண்கள் எடுத்ததால் தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தாய் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டமான வேலூர், காட்பாடி கோபாலபுரம் பகுதியை சேர்ந்த தம்பதியினர் காமேஷ் மற்றும் சுமித்ரா. இவர்கள் இருவரும் மருத்துவர்கள் ஆவர். இவர்களுடைய மகன் தனகார்த்திக்(17) பிளஸ்-2 பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
தங்களை போலவே மகனை மருத்துவருக்கு படிக்க வைக்க வேண்டும் என்று பெற்றோர்கள் நினைத்துள்ளனர். ஆனால், குறைவான மதிப்பெண்கள் எடுத்திருந்ததால் மருத்துவருக்கு படிக்க வைக்க முடியவில்லை.
இதனால், சுமித்ராவுக்கும் அவரது மகனுக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 26-ம் திகதி அன்று குறைவான மதிப்பெண் பெற்ற காரணத்தால் சுமித்ரா மகனை திட்டியுள்ளார். அதனால், அவரது மகன் சாப்பிடாமல் இருந்ததால் சுமித்ரா மனமுடைந்து காணப்பட்டுள்ளார்.
பின்னர், நேற்று முன்தினம் மூவரும் வழக்கம் போல உறங்க சென்றனர். ஆனால், நேற்று காலை எழுந்து பார்த்த போது மேற்கூரை இரும்பு கம்பியில் சுமித்ரா உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இதையடுத்து, தகவலிருந்து வந்த பொலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.