;
Athirady Tamil News

திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’..!!

0

வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், உள்தமிழகம், கேரளா, தெற்கு உள்கர்நாடகா, ராயலசீமா பகுதிகளில் பருவமழை பரவி இருக்கிறது. தமிழகத்தில் இதன் காரணமாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகிறது. மேலும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தென் இலங்கை கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால், வருகிற 3-ந் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

‘ஆரஞ்சு அலர்ட்’
அதேபோல், திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் இன்று பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இதில் திருவள்ளூர், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு அலர்ட்’ நிர்வாக ரீதியாக வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

நாளை (செவ்வாய்க்கிழமை) திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் காஞ்சீபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்பதால், அங்கும் நிர்வாக ரீதியாக ‘ஆரஞ்சு அலர்ட்’ கொடுக்கப்பட்டிருக்கிறது. இதுதவிர சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

மழை அளவு
நாளை மறுதினமும் (புதன்கிழமை), அதற்கு அடுத்த நாளும் (வியாழக்கிழமை) இதேபோல், சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருக்கிறது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில், ஒகேனக்கல் 5 செ.மீ., திருக்கழுக்குன்றம், செய்யூர், முகையூர் தலா 4 செ.மீ., செங்கல்பட்டு, கடலாடி, மதுராந்தகம், தரங்கம்பாடி, காஞ்சீபுரம், பாம்பன், மாமல்லபுரம், ஆரணி, ராமேஸ்வரம், சூரங்குடி தலா 3 செ.மீ., உள்பட சில இடங்களில் மழை பெய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.