;
Athirady Tamil News

13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதிக்கு தார்மீக உரிமை கிடையாது – விமல்!!

0

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவும், அரச வளங்களை தனியார்மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது, ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, மக்களாணை இல்லாத பாராளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகாரத்த மாநாட்டு மண்டபத்தில் 26 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு மிகுதியாக உள்ள வளங்களை தனியார்மயப்படுத்த அரசாங்கம் அதிக அவதானம் செலுத்தியுள்ளது.

அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதாக குறிப்பிட்டுக் கொண்டு அரச நிறுவனங்களை முழுமையாக தனியார் தரப்பினருக்கு விற்கும் நடவடிக்கைகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்துள்ளார்.

நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இயற்கை காரணிகளினால் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, திட்டமிட்ட வகையில் நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டு முதல்காலாண்டு பகுதியில் இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட அப்போதைய ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் இலங்கை ரூபாவின் பெறுமதியை தளம்பல் நிலையில் பேணாவிட்டால் இந்திய கடனுதவி திட்டம் இலங்கைக்கு கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும் என குறிப்பிட்டார்.

இதன் பின்னரே ரூபா தளம்பல் நிலைக்கு நிலைப்படுத்தப்பட்டது, இதனால் பணவீக்கம் அதிகரித்து நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும் சூழல் தோற்றம் பெற்றது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியை வெளி தரப்பினர் தமது சுய தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள். பொருளாதார நெருக்கடியை காண்பித்து நாட்டுக்கு எதிரான பல விடயங்களை செயற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை மாகாணங்களுக்கு பகிர்ந்தளித்தால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினைகள் தோற்றம் பெறும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், அரச வளங்களை தனியார் மயப்படுத்தவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தார்மீக உரிமை கிடையாது ஏனெனில் அவர் மக்கள் பிரதிநிதியல்ல, பாராளுமன்றத்தின் 134 உறுப்பினர்களின் பிரதிநிதி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்திற்கு பாராளுமன்றத்தில் மக்களாணை கிடையாது, ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நிலை அறிந்து செயற்பட வேண்டும். தனக்கு மக்களாணை உள்ளதா என்பதை அறிய வேண்டுமாயின் அவர் ஏதாவதொரு தேர்தலை தாராளமாக நடத்தலாம் என்றார்.

13 ஆவது அரசியலமைப்பு குறித்து ஜனாதிபதியின் விஷேட அறிவிப்பு!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.