;
Athirady Tamil News

எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகளை இரட்டிப்பாக உயர்த்திய ட்ரம்ப் நிர்வாகம்

0

எஃகு மற்றும் அலுமினிய இறக்குமதிகள் மீதான வரிகளை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக இரட்டிப்பாக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

புதன்கிழமை முதல் அமுல்
மார்ச் மாதத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக உலோகங்கள் மீதான இறக்குமதி வரிகளை ட்ரம்ப் நிர்வகாம் உயர்த்தியுள்ளது. புதன்கிழமை முதல் அமுலுக்கு வரும் இந்த நடவடிக்கைகள், அமெரிக்க எஃகுத் தொழிலின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை என்று ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆனால், இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவிற்கு வெளியே உள்ள எஃகு உற்பத்தியாளர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். மேலும், உலோகங்களைப் பயன்படுத்தும் அமெரிக்க பயனர்களுக்கு கடுமையான செலவை ஏற்படுத்தும் என்றே மதிப்பிடுகின்றனர்.

எஃகு மற்றும் அலுமினியம் மீதான வரிகள் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டாலும், பிரித்தானியாவிற்கு 25 சதவீதம் என்றே ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்திற்குப் பிறகு, உலகின் மிகப்பெரிய எஃகு இறக்குமதியாளராக அமெரிக்கா உள்ளது,

மேலும் அமெரிக்க அரசாங்கத்தின் கூற்றுப்படி, கனடா, பிரேசில், மெக்சிகோ மற்றும் தென் கொரியாவிலிருந்து பெரும்பாலான உலோகங்களைப் பெறுகிறது.

ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில், தேசிய பாதுகாப்புக்கு இன்றியமையாததாகக் கருதப்படும் தொழில்களைப் பாதுகாக்க அவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு சட்டத்தை மேற்கோள் காட்டி, எஃகு மீது 25% மற்றும் அலுமினியத்தின் மீது 10% வரிகளை விதித்தார்.

ஆனால், அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டு, நிறுவனங்களின் வேண்டுகோளின் பேரில் சில இறக்குமதிகளுக்கு விலக்கு அளித்த பிறகு, பல இறக்குமதிகள் இறுதியில் வரிகளிலிருந்து தப்பித்தன.

மிக அதிகமாக உயர்த்த
இதனிடையே, வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், அமெரிக்க வணிகங்கள் அமெரிக்க சப்ளையர்களிடமிருந்து வாங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், வரிகளை மிக அதிகமாக உயர்த்த விரும்புவதாக கூறினார்.

மே மாத நிலவரப்படி, டிரம்ப் வரிகளை உயர்த்துவதற்கு முன்பு இருந்ததை விட, அமெரிக்காவில் இறக்குமதிகள் மற்றும் எஃகு உற்பத்தி விகிதம் சிறிதளவு மாற்றம் கண்டது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது ஏப்ரல் மாதத்தில் எஃகு இறக்குமதி 17% குறைந்துள்ளது.

மேலும், அமெரிக்காவிற்கு உலோகங்களை விற்கும் வணிகங்கள், ட்ரம்பின் சமீபத்திய அறிவிப்பு இன்னும் மோசமான சரிவுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறின. மார்ச் மாதத்தில் ட்ரம்பின் நடவடிக்கைகள் ஏற்கனவே கனடாவையும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்க தயாரிப்புகளுக்கு வரிகளை விதிக்கும் நிலைக்கு தள்ளின.

ட்ரம்பின் முதல் ஆட்சியின் போது அமுலுக்கு கொண்டுவரப்பட்ட வரிகள் எஃகுத் துறையில் சுமார் 1,000 வேலைவாய்ப்புகளை உருவாக்கியது, ஆனால் உற்பத்தி மற்றும் கட்டுமானம் போன்ற பிற துறைகளில் பொருளாதாரத்திற்கு 75,000 வேலைவாய்ப்புகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.