;
Athirady Tamil News

அரசாங்கத்திடம் ஸ்திரமான பொருளாதாரக் கொள்கைகள் கிடையாது – சரத் பொன்சேகா!!

0

நாடு பாரியபொருளாதார நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

அவ்வாறிருக்கையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இந்த நிதியை நாடளாவிய ரீதியில் மருந்து தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கு மருந்து கொள்வனவுக்காக பயன்படுத்தி இருக்கலாம். தற்போது உள்ள ஆட்சியாளர்களிடம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எந்தவொரு ஸ்திரமான கொள்கைகளும் இல்லை என்று எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்தறை மாவட்டத்திற்கான தேர்தல் பிரசார கூட்டம் 4 ஆம் திகதி சனிக்கிழமை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் பாணந்துறையில் நடைபெற்றது.

இதன்போது கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

நாங்கள் ஒவ்வொரு கூட்டங்களுக்கு செல்லும் போதும் மக்கள் தாம் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை மறைத்து எமது முகங்களை பார்த்து புன்னகை செய்வதற்கு முயற்சிக்கிறார்கள்.

இருப்பினும் அவர்கள் பொருளாதார நெருக்கடிகள் மூலம் ஏற்பட்டுள்ள சவால்களுக்கு முகங் கொடுக்க முடியாமல் அவதியுறுகிறார்கள் என்பது அவர்களின் முகங்களை பார்க்கும் போது எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

மேலும் அவர்களை போலவே நாமும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கிறோம். இந்த பிரசார கூட்டத்திற்கு வருகை தந்து மீள வீட்டிற்கு செல்வதற்கு எனது வாகனத்திற்கு 10,000 ரூபாவிற்கு டீசல் நிரப்ப வேண்டி யுள்ளது. முன்னர் வாகனத்திற்கு 1,000 ரூபாவிற்கு டீசல் நிரப்பினால் ஹம்பாந்தோட்டைக்கே சென்று வரலாம்.

பொதுமக்கள் தமது அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதில் பல்வேறு சிக்கல்களுக்கு முகங் கொடுத்துள்ளனர். அவ்வாறிருக்கையில் சுதந்திர தின நிகழ்வுகளுக்காக அரசாங்கம் 200 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

இந்நிலையில் நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் உண்மையான சுதநத்திரத்தை அனுபவிக்கின்றனரா?

இந்த நிதியினை நாடளாவிய ரீதியில் மருந்து தட்டுப்பாடு நிலவும் வைத்தியசாலைகளுக்கு மருந்து கொள்வனவுக்காக பயன்படுத்தி இருக்கலாம். நாட்டு மக்கள் துன்பத்தை அனுபவித்த உள்ள நிலையிலும் முன்னர் இருந்த ஆட்சியாளர்கள் போல

இன்றும் ஆட்சி உள்ளவர்கள் சுகபோகமான வாழ்க்கையை அனுபவித்து கொண்டு குதுகலமாக இருக்கிறார்கள்.

இந்நிலையில் தற்பொழுது உள்ள ஆட்சியாளர்களிடம் நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் எந்தவொரு முறையான நோக்கங்களும் திட்டங்களும் கிடையாது.

எதிர்காலம் தொடர்பில் நீண்டதொரு ஸ்திரமான குறிக்கோள்களும் கிடையாது ஆனால் அவர்கள் அன்றும் இன்றும் நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்களுக்கு தற்காலிகமாக தீர்வு பெற்றுக் கொடுக்கும் செயல் முறையிலேயே ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.