;
Athirady Tamil News

எளிமையான முறையில் இடம்பெற்ற 9 ஆவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத்தொடர் – இடம்பெற்றது என்ன ?

0

ஒன்பதாவது ஆவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு முப்படைகளின் மரியாதை அணிவகுப்பு மற்றும் மரியாதை வேட்டு எதுவுமின்றி மிகவும் எளிமையான முறையில் இடம்பெற்றது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடரை இன்று புதன்கிழமை (பெப் 08) காலை 09.30 மணியளவில் ஆரம்பித்து வைத்தார்.

பலத்த பாதுகாப்பு

பாராளுமன்றத்தின் கூட்டத்தொடர் ஆரம்பமாகும் நிகழ்வையிட்டு பாராளுமன்றம் மற்றும் பாராளுமன்றத்தை அண்மித்த வீதிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

பாராளுமன்ற சுற்றுவட்ட பகுதியில் கலக தடுப்பு பிரிவினர் உட்பட பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்பட்டிருந்தனர்.

சபாநாயகர் மற்றும் பிரதமர் வருகை

கூட்டத்தொடர் ஆரம்ப நிகழ்வில் சபாநாயகர் மஹிந்த யாப்பா மற்றும் அவரது பாரியார் ஆகியோர் வருகை தந்தனர். இவர்களை பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்க வரவேற்றார். இதனை தொடர்ந்து சபாநாயகர் பிரமரின் வருகைக்காக முன்னிலையில் இருந்தார்.

சபாநாயகரின் வருகையை தொடர்ந்து பிரதமர் தினேஷ் குணவர்தன வருகை தந்தார். சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.

ஜனாதிபதி வருகை

காலை 09.35 மணியளவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வருகை தந்தார். முதற்பெண்மணி பாராளுமன்ற கூட்டத்தொடர் நிகழ்விற்கு வருகை தரவில்லை. சபாநாயகர், பிரதமர், பாராளுமன்ற செயலாளர் ஆகியோர் ஜனாதிபதியை வரவேற்று படைக்கலசேவிதர்,பிரதி படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர் ஆகியோர் முன்செல்ல சபாநாயகர், பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் ஜனாதிபதி பாராளுமன்ற கட்டடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அருகே கோட்டை மகளிர் கல்லூரி மாணவியர் ஜயமங்கல கீதம் இசைத்தனர்.

இதன் பின்னர் உடையணி அறைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஜனாதிபதி 9.55 மணிவரை அங்கிருந்த பின்னர் காலை 10.00 மணிக்கு சபைக்கு வருகை தந்தார். ஜனாதிபதியின் வருகையை படைகள சேவிதர் உரத்து அறிவித்தார். ஜனாதிபதி சபைக்கு நுழைந்த உடன் எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் எழுந்து நின்று சிரித்து ஆரவாரம் எழுப்பி சபையில் இருந்து வெளியேறினார்கள்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அக்கிராசனத்தில் அமர்ந்து சபைக்கு தலைமை தாங்கினார். இதனை தொடர்ந்து பாராளுமன்ற செயலாளர் பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு மற்றும் புதிய பாராளுன்ற கூட்டத்தொடர் தொடர்பான அறிவிப்பை வாசித்தார்.

அக்கிராசன உரை

காலை 10 மணியளவில் அரசாங்கத்தின் கொள்கை உரையை வாசித்த ஜனாதிபதி பொருளாதார நிலைமை, அரசியல் நிலைமை, உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டினார். 55 நிமிடங்கள் உரையாற்றினார்.

ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரைக்காக அழைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தூதுவர்கள், இராஜதந்திரிகள், பிரதம நீதியரசர், முப்படைத்தளபதிகள், மதத்தலைவர்கள் உயரதிகாரிகள் பலரும் சபாநாயகர் கலரி மற்றும் பொதுமக்கள் கலரியில் அமர்ந்திருந்து உரையை செவிமடுத்தன.

வெறிச்சோடிக்கிடந்த சபை

ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடன உரையை எதிர்க்கட்சிகள் புறக்கணித்ததால் சபை வெறிச்சோடிக்கணப்பட்டது. அதேவேளை ஜனாதிபதியின் உரையின் சில அம்சங்களுக்கு அரச தரப்பினர் மேசைகளில் தட்டி வரவேற்பளித்தனர்.

சபை ஒத்திவைப்பு அறிவிப்பு

பாராளுமன்ற அமர்வை ஒத்திவைப்பை அறிவிக்குமாறு சபை முதல்வர் சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதியிடம் வலியுறுத்தினார்.இதனை தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாளை காலை 09.30 மணி வரை பாராளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.