;
Athirady Tamil News

3 மாநில தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!!

0

வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களில் உள்ள சட்டசபைகளுக்கு கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுராவில் உள்ள 60 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 16-ம் தேதி தேர்தல் நடந்தது. அங்கு 90 சதவீத வாக்குகள் பதிவாகின. அதே போன்று தலா 60 இடங்களைக் கொண்ட மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே கட்டமாக 27-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால் மேகாலயாவில், சோஹியாங் தொகுதியில் ஐக்கிய ஜனநாயக கட்சி வேட்பாளர் டான்குபார் ராய் லிங்டோ மறைவால் தேர்தல் ஒத்தி போடப்பட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாகாலாந்தில், அகுலுட்டோ தொகுதியில், தற்போதைய எம்.எல்.ஏ. காஜெட்டோ கினிமி, போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே 59 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திரிபுராவில் 90 சதவீதமும், மேகாலயாவில் 85 சதவீதமும், நாகாலாந்தில் 84 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இதேபோன்று மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தல்களுடன் ஒரு எம்.பி. மற்றும் 6 சட்டசபை தொகுதிகளுக்கும் 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், இன்று காலை 8 மணிக்கு திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய 3 மாநிலங்களிலும், இடைத்தேர்தல் நடந்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதிகளிலும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று மாலைக்குள் 3 மாநில சட்டசபை தேர்தலிலும், இடைத்தேர்தலைச் சந்தித்த 5 மாநிலங்களின் 6 சட்டசபை தொகுதி தேர்தல்களிலும் முடிவுகள் அறிவிக்கப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 3 மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரிய வரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.